கடற்கரை [ கவிதை ]
நீலத் திரைகடலோரம் - நின்று
நெஞ்சம் மகிழ்ந்திடு நேரம்;
காலைத் தழுவியே ஓடும் - அந்த
காதல் அலைகளைப் பாரும்;
காலம்பல கடந்தாலும் - நல்ல
மாற்றம்பல நிகழ்ந்தாலும்
நீலக்கடற்கரை யோரம் - வந்து
நித்தம் அழகினைக் காண்பார்;
காதற்கனிரசம் பொங்க - பல
காதல் மொழிகளைப் பேச
ஆழிக்கரையினை நாடும் - இன்பக்
காதற் கிளிபல நூறு!
காமக்களிகளைச் செய்ய - சிலர்
வேடந் தரிப்பது உண்டு;
ஈனப்பிறவிகளாய் வந்து - இங்கு
ஈனச்செயல் புரிவார்;
வெட்கந்துறப்பது இங்கு - தெரு
விலங்குகளுக்குச் சரியே!
வெட்கம் இழப்பதிங்கு - நல்ல
மனிதப்பிறவி யாமோ?
பிள்ளைகள் ஒன்றையொன்று - துரத்திப்
பிடித்திடச் செல்வதைப்போல்
துள்ளியே அலைகள் வந்து - கரையைத்
தொட்டுவிட்டோடிச் செல்லும்;
ஏற்றினைத் தழுவச் செல்லும் - வீர
இளைஞர்கள் கூட்டம் போல
காற்றினால் உந்தப்பட்டு - கடல்
அலைகளும் கரையில் மோதும்.
துன்பங்கள் மாறிமாறி - நம்
உள்ளத்தைத் தாக்கும்போது
நெஞ்சத்தில் அலைகள்மோதும் - நம்மை
நிமிடத்தில் புரட்டிப்போடும்.
பிள்ளைகள் போல அலைகள் - தொட்டு
விட்டோடும்போது உள்ளந் துள்ளும்;
அள்ளியே அணைக்கத் தோன்றும் - நம்
ஆசையும் அதிகமாகும்.
பிள்ளைகள் உருவம் நீங்கி - பெரும்
பேயென மாறினாற்போல்
வல்லிய வேகங்கொண்டு - அலைகள்
வான்தொட வளரக்கூடும்.
சாதிமத பேதமின்றி - வேத
சாத்திர நெறிகளின்றி
ஆதியோடந்த மாக - நின்ற
அனைவரையும் கொண்டுபோகும்.
ஆழிசூழ் இயற்கையெல்லாம்
ஈசனே என்பதறிக!
அன்பினில் தாயுமாகும்- சினம்
வந்திடின் தந்தையாகும்.
----- அரங்க. குமார்
சென்னை- 600049.