நல்ல தீர்ப்பு எப்படிக் கிடைக்கும்?
(புதுக் கவிதை)
தேர்தல் புதுவெள்ளம்
ஆற்றினிலே ஓடியது.
ஒரே துறையில்
புலியும் மானும்
புறாவும் பருந்தும்
நரியும் முயலும்
நீர் குடித்தன.
அசைவப் புலி
சைவ மானை
நட்புடன் பார்த்தது.
மானும் தலையையாட்டிச் சிரித்தது.
புறா பருந்தை குசலம் விசாரித்தது.
நரி முயலைக் கட்டிப் பிடித்தது.
இதைப்பார்த்த மக்களெல்லாம்
ஆச்சரியப்பட்டார்கள் .
ஐந்து வருடங்களுக்கு முன்னர்
மான்கள் காட்டை அழிக்கின்றன
என்று புலி
காட்டுத் தர்பாரில் உறுமியதையும்
புலிகள் ரத்த வெறிபிடித்தவை
இவற்றைப் பிடித்து கூண்டில் போடவேண்டும்
என்று மான்கள் கூறியதையும்
மக்கள் யாரும் மறந்திருக்கவில்லை.
புறாக்கள்
மாடமாளிகைகளிலும் கூடகோபுரங்களிலும்
சொகுசாக வாழ்பவை ;
அவைகளுக்கு ஏழ்மையின் கொடுமை தெரியாது
என்று பருந்துகள் கேலிசெய்து இருந்தன.
பருந்துகள் கொலைகாரர்கள் என்று
புறாக்கள் சாடியிருந்தன.
முயல்கள் குழிபறிப்பவை என்று
நரிகள் நையாண்டி செய்திருந்தன.
நரிகள் ஏமாற்றுக்காரர்கள் என்று
முயல்கள் முழங்கி இருந்தன.
ஆனால் இப்பொழுது அவைகள்
வேறுவிதமாக பேசிக்கொண்டிருந்தன.
மான்கள்
புலியார் காட்டின் காவலர் என்றன.
அவருக்குத் தான் நாட்டை ஆளத்தெரியும் என்றன.
புலியாரோ
மான்கள் அகிம்சையின் தூண்கள் என்றன.
புறா
பருந்தார் நடக்க முடியாமல் இருந்த
ஒரு எலியை தூக்கிச் சென்று
தன் கூட்டில் விட்டுவிட்டு வந்ததை
நான் என் இருகண்களால் பார்த்ததாக
நற்சாட்சி பத்திரம் வாசித்தது.
முயல்
நரிகள் கூட்டத்தோடு சேர்ந்துண்ணும்
குணம் கொண்டவை என்றன.
நரி
முயல்கள் மற்றவர்களுக்காக
மூச்சிரைக்க ஓடியாடி வேலைசெய்பவை என்றது.
மக்கள் சிரித்தார்கள்;
நாமும் இப்படித்தானே பேசுகிறோம் ;
மறப்போம் மன்னிப்போம் என்றார்கள்;
மக்கள் இப்பொழுதெல்லாம்
யாரையும் குற்றஞ்சாட்டுவதில்லை;
அவன் திருடன் என்று சொல்வதில்லை;
இன்று யார் திருடவில்லை என்கிறார்கள்;
அவன் பொய்யன் என்று சொன்னால்
யார் பொய் சொல்லவில்லை என்று கேட்கிறார்கள்;
இப்படிப்பட்டவர்கள்
தீர்ப்பெழுதினால் எப்படி
நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
————-அரங்க. குமார்
சென்னை – 600049.