மாற்றம் (புதுக்கவிதை)

மாற்றம் (புதுக்கவிதை)

 

நாளைய  பொழுது விடியக் கூடாது கடவுளே !

என்று நளாயினியும்  வேண்டலாம்.

நாளை தூக்கிலிடப்படவிருக்கும்

கைதியும் வேண்டலாம்.

ஏதோ வெறுப்பினால்

பிடித்த சங்கீதம் பிடிக்காமல் போகலாம்.

விருந்தென நாம் நினைத்த ஒருவர்

மருந்தென கசக்கலாம்.

மருந்தென கசந்தவர்

விருந்தென மாறலாம்.

உண்மை பொய்யாகலாம்.

பொய் உண்மையாகலாம்.

பொய் பிடித்துப் போகலாம்.

உண்மை கசந்து போகலாம்.

இளமையில் பிடித்தது

முதுமையில் கசக்கலாம்.

இளமையில் கசந்தது

முதுமையில் பிடிக்கலாம்.

பொட்டல்காட்டில் போதிமரம் வளரலாம்.

நேற்றும் இன்றும் ஒன்றல்ல.

இன்றும் நாளையும் ஒன்றல்ல.

நீயின்றி நானில்லை என்றவர்கள்

நீ வேறு நான் வேறு என்று பிரிந்து போகலாம்.

சுவரை எழுப்பியதும்

சுவரை இடித்ததும்

ஜெர்மன் சரித்திரம்.

வெய்யிலில் மழையை வேண்டுவதும்

மழையில் வெய்யிலை வேண்டுவதும் நாமே.

மாற்றம் ஒன்றே மாறாதது.

 

                                                  —— அரங்க. குமார்

                                                             சென்னை : 600 049.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *