அப்பா ஒரு மரபுக் கவிதை!

அப்பா ஒரு மரபுக் கவிதை [ புதுக்கவிதை]

அப்பா!
பிள்ளைகள்
சிறுவயதாய் இருக்கும்பொழுது
அவர்களுக்குக் கதாநாயகனாய்த் தோன்றி
வளர்ந்தபிறகு
வில்லனாய்த் தெரிபவர்.
வெம்மையைக் கொடுக்கும் கதிரவன்.
கதிரவன் இல்லையென்றால்
ஜனனம் எது?
வீட்டுக்குள்ளே இருக்கும் காவல் அதிகாரி.
பிள்ளைகள்
கூட்ட நெரிசலில்
மாட்டிக் கொள்ளாமல்
தோளில் சுமந்து கொள்ளும்
சுமை தாங்கி!
ரோஜா முள்!
முள் என்று மலரைக் குத்தியது?
தான் கடந்து வந்த பாதை
கரடு முரடானது என்பதால்
வேறு நல்ல பாதையை
அமைத்துக் கொடுக்க முயலும்
ஏழைப் பங்காளன்.
நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து
நம்மைவிட அதிகமாக யோசிக்கும்
அனுபவஸ்தன்.
பிள்ளைகள் சரியில்லையென்றால்
இவன் எப்படி எதிர்காலத்தில்
பிழைக்கப் போகிறான் என்று
அம்மாவுடன் கலந்தாலோசிக்கும் மந்திரி.
படியளக்கும் பரமன்.
பிள்ளையின் வாழ்க்கைச் சாலையின்
ஆரம்ப  கட்டத்தில்
நில்! கவனி! செல்!
என்று வழிகாட்டும் போக்குவரத்து விளக்கு!
பிள்ளைகளுக்குச் சிரமம் தராமல்
சுமந்து செல்லும் மின்னேணி!
மாற்ற முடியாத பந்தம்.
மாறாத சொந்தம்!
நீ இப்படி இருக்க வேண்டும்!
நீ இப்படி வாழவேண்டும் என்று
இலக்கணம் சொல்வதால்
எல்லா அப்பாக்களும்
மரபுக் கவிதைகளே!

 

—– அரங்க. குமார். சென்னை- 600049.

அது! [புதுக்கவிதை]

அது!     [புதுக்கவிதை]
 
அது அவனுக்குக் கிடைக்கவில்லை!
அவன் அதைத் துரத்துகிறான்!
அது ஓடுகிறது!
அவனுக்குப் பழிப்புக் காட்டி ஓடுகிறது!
அவன் கால்கள் வலிக்கின்றன!
அவன் என்ன செய்தால்
அது அவன் பக்கத்தில் வரும்?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு
வழியைச் சொல்கிறார்கள்!
அவனும்   என்னென்னவோ செய்து பார்க்கிறான்!
அது அவன் பக்கத்தில் வரமாட்டேன் என்கிறது!
நான் நல்லவன்!
என்னிடம் வா என்கிறான்!
அது வரமாட்டேன் என்கிறது!
நான் பாவம் இல்லையா?
மிகவும் களைத்துப்போய்விட்டேன்!
வாம்மா என்கிறான்?
காரிலிருந்து ஒருவன் இறங்கி வருகிறான்!
அவன் பக்கத்தில் நின்றுகொண்டு சிரிக்கிறது!
அம்மா! அவன் மிகவும் பொல்லாதவன் அம்மா!
அவன் கொலைகள் புரிந்தவன்!
பலரை மோசம் செய்தவன்!
இரக்கம் இல்லாதவன்!
கொள்ளைக்காரன்!
நாட்டையே காட்டிக் கொடுப்பவன்!
அவன் வேண்டாம்!
என்னிடம் வா!
ம்ஹும்! வரமாட்டேன் என்றது!
நான் என்ன செய்தால் வருவாய் என்று கேட்டான்?
இவன் எனக்காக எதுவும் செய்வான்?
நீ எதுவும் செய்யமாட்டாய்!
எதற்கெடுத்தாலும்
நியாயம் தர்மம் பேசுபவனிடம்
நான் எப்படி வாழ முடியும்?
அவன் உன்னைத் தூக்கி வீசுகிறானே!
உண்மை தான்!
நீ எப்பொழுதாவது தான்
என்னை நினைக்கிறாய்!
இவன் கனவிலும் நனவிலும்
என்னையே நினைக்கிறான்!
இவன் எனக்காக உயிரையும் கொடுப்பான்?
எனக்காக உயிரையும் எடுப்பான்?
எப்பொழுதும் என்னை காதலிப்பவனிடம்தான்      
நானிருப்பேன்!
நீ நல்ல பெயர் எடுக்கப் பார்ப்பவன்?
இவன் எனக்காக எந்தப் பழியையும் ஏற்பான்!
என்று சொல்லிவிட்டு
காரில் இருந்து இறங்கிவன்
சட்டைப் பையில் ஒளிந்துகொண்டு
மெல்ல எட்டிப் பார்த்து சிரித்தது!
அது பேயல்ல! பணம்!
 
                                                       -அரங்க. குமார்
                           சென்னை - 600 049.
 

வலி [ புதுக்கவிதை]

வலி

துன்பத்துக்குப் பின்னால் 
இன்பம் வரும்!
உடைபடாத கல் சாமியாவதில்லை!
உருக்கப்படாத எஃகு எந்திரங்களாவதில்லை!
கோர்க்கப்படாத பூக்கள் மாலையாவதில்லை!
துவைக்கப்படாத துணி தூய்மையாவதில்லை!
வருத்தப்படாத மனம் மனிதனாவதில்லை!
வலிக்காத பிரசவம் நடந்ததில்லை!
வலியில்லாத மனிதனில்லை!
வலியில்லாத வாழ்க்கையில்லை!
 -------- அரங்க. குமார் 
 சென்னை - 600 049.

கண்ணதாசன் [ புதுக் கவிதை]

 

கண்ணதாசன் [ புதுக் கவிதை]
நீ கவிதை மழை
பொழிந்து கொண்டிருந்தாய்!
நான் காகிதக் கப்பல் செய்து
தண்ணீரில் விட்டுக்கொண்டிருந்தேன்.
நான் கவிதைகளைப்
படிக்க ஆரம்பித்தபோது
நீ வானுலகம் போய்விட்டதாய்ச் சொன்னார்கள்!
நீ வாழ்ந்த காலத்தில் நானிருந்தேன்!
எனக்கு உன்னைத் தெரியாது!
எனக்கு உன்னைத் தெரிந்தபோது
நீ துருவ நட்சத்திரமாகிவிட்டாய்!
நான் உன் கவிதைகளில் கரைந்தேன்!
கற்பனை சுகமானது என்பார்கள்.
உன் கற்பனைகளில் நிஜமிருந்தது.
நீ உறவுகளுக்கு அன்பைச்சொன்னாய்!
காதலிக்கக் கற்றுத் தந்தாய்!
குழந்தைகளைத் தாலாட்டினாய்!
குமரர்களுக்குத் தமிழை மீட்டினாய்!
உறவைச் சொன்னாய்!
பிரிவைச் சொன்னாய்!
வெற்றியைச் சொன்னாய்!
தோல்வியைச் சொன்னாய்!
புரியாத கடவுள் தத்துவம் புரிந்தது!
எழுதத் தெரியாதவனுக்கும்
எழுதத் தோன்றியது!
பாடத் தெரியாதவன் பாடினான்!
பேசத் தெரியாதவனும் பேசினான்!
கண்ணதாசன் சென்றவழியில்
செல்லவேண்டும் என்று கிளம்பிய
இளங்கவிஞர்கள் எத்தனையோ பேர்!
நீ அன்னையிடம் வரம் வாங்கியவன்!
வார்த்தைகளுக்குத் தவம் கிடக்காதவன்
உன் நாவிலிருந்து
தேனருவி புறப்பட்டு
திரை கடலில் ஆர்ப்பரித்தது!
நீ பட்டதையும் கெட்டதையும்
பாடியதால் பட்டினத்தான்!
சந்தத்தில் அருணகிரி!
சொல்வண்ணத்தில் ஒண்கம்பன்!
உன்னோடு பேச ஆசை!
அது இயலாது என்பதனால்
தமிழோடு பேசுகிறேன்!
தமிழோடு பேசினால்
உன்னோடு பேசியது போலத்தானே!
 
                                                       -------- அரங்க. குமார்
                           சென்னை - 600 049.