காதல் பூவாய் மலரும்.
சத்தம் இருக்காது.
காணும்போதெல்லாம் பூத்து நிற்கும்.
காதல் பூத்ததனை
முகம் காட்டிவிடும்.
காதல் ஒருதலையோ ?
இருதலையோ ?
காதல் காதல் தானே.
தினம் தினம் பார்க்கத் தோன்றும்.
பாராதபோதினிலே ஏக்கந் தோன்றும்.
மனம் வாடிவிடும்.
பித்துப் பிடித்துவிடும்.
காதற்பித்தினிலே
எத்தனையோ வகைகளுண்டு;
போகின்ற வழியினை மறித்து நிற்கும்.
வலியப் பேசும்.
அர்த்தம் இருந்திடலாம்.
இல்லாமலும் போய்விடலாம்.
அடிக்கடி எதிரில் போய்நிற்கத் தோன்றும்.
தன் நல்ல குணத்தைக் காட்டி நிற்கும்.
நன்றி சொல்லும்.
திறமையைக் காட்டமுயலும்.
திறமை இருந்தால்
உயர்ந்து நிற்கும்.
இல்லையென்றால்
அசட்டுச் சிரிப்பை உதிர்க்கும்.
நான் மீண்டும் முயல்வேன் என்று சொல்லும்.
உதவும் குணம் அதிகமாக இருக்கும்.
சிலர் காதல் அறிவினை விரும்பும்.
சிலர் காதல் அறிவீனத்தை விரும்பும்.
சிலர் காதல்
தீயப்பழக்கங்களுக்கும்
நியாயம் கற்பித்துக்கொள்ளும்.
தீயவன் நல்லவனாய்த் தோன்றுவான்.
நல்லவன் தீயவனாய்த் தோன்றுவான்.
சிலர் காதல் பொய்களைத் தொடர்ந்து சொல்லும்.
சிலர் காதல் மழைத் தூறல் போல் வந்து போகும்.
சிலர் காதல் ஒரே இடத்தில் நிலைக்கும்.
சிலர் காதல் போகுமிடமெல்லாம் தொடரும்.
சிலர் காதல் நீறு பூத்த நெருப்பாய் இருக்கும்.
சிலர் காதல் அச்சத்தில் மடிந்து விடும்.
காதல் புனிதமானது என்பார்கள்.
கங்கையைப் போல் பிணங்களும் மிதக்கும்.
சாக்கடை நீர் கலக்கும்.
சிலர் காதல் தோற்றுப்போனதினால்
முடிந்து போகும்.
சிலர் காதல் தியாகமாகும்.
சிலர் காதல் மாளிகையாய்க் கோபுரமாய் விரியும்.
சிலர் காதல் நோட்டுப் புத்தகத்தில்
கவிதைகளாய்ச் சிரிக்கும்.
சிலர் காதல் வாங்கித் தின்பதிலேயே கழியும்.
சிலர் காதல் வாங்கிக் கொடுப்பதிலே கழியும்.
சிலர் காதல் பணம் பார்த்து வரும்.
சிலர் காதல் உத்தியோகம் பார்த்து வரும்.
சிலர் காதல் உடற்சூட்டைத் தணித்துக்கொள்ள வரும்.
பிள்ளைப் பருவத்துக் காதல்
முதிய பருவத்துக் காதல்
என்று காதலின் வடிவங்கள் இன்னும் எத்தனையோ?
விரும்பாத பெண்ணைக் கொல்ல நினைப்பதும்
ஒருவிதக் காதல்தான் என்று
திரைப்படங்களில்
சொல்லாமல் இருந்தால் நல்லது.
—- அரங்க குமார்
சென்னை – 600 049.