படையல் (புதுக்கவிதை)

படையல்

உங்கள் வீட்டில்

சாமி கும்பிடும்போது

படையலில் காரசேவு வைக்கிறாயே

ஏன் என்றுகேட்டாள் பக்கத்துவீட்டுக்காரி.

என் வீட்டுக்காரரின் பாட்டி சாகும்போது

காரசேவு சாப்பிடணும்போல் இருக்கிறது

என்றாராம்.

வாங்கி வருகிறேன் என்று சொன்னவர்

மறந்துவிட்டாராம்.

அதற்குள் பாட்டியும் மறைந்து விட்டார்களாம்.

அதற்குத்தான் என் மாமனார்

படையலில் காராசேவு வைக்கச்சொன்னார்.

என் வீட்டுக்காரரும் அதையே செய்து வருகிறார்.

அன்னதானம் செய்கிறீர்களே எதற்கு?

என்று  கேட்டாள்.

என் மாமனார் போனபிறகு

என் மாமியாருக்கு நான் சோறு போடமாட்டேன்.

அந்தக் கிழவி

அய்யோ! பசிக்குதே! என்று

வயிற்றில் அடித்துக்கொண்டு அழும்.

காலையில் தான் இரண்டு இட்டலிகள் கொடுத்தேன்.

மத்தியானம் இரண்டு மணிக்கெல்லாம்

சோறு சோறு என்று கேட்டால்

எங்கு போவது என்பேன்.

அந்தக் கிழவி தட்டை எடுத்துக்கொண்டு

அக்கம் பக்கத்து வீடுகளுக்கெல்லாம் செல்லும்.

என்னை குருவியாய்ச் சாபிக்கும்.

என் வீட்டுக்காரர் பயந்த சுபாவம்.

நான் குரல் கொடுத்தால் அடங்கிவிடுவார்.

அந்த கிழவியும் போய் சேர்ந்துவிட்டாள்.

இப்பொழுது எங்கள் பிள்ளைகளுக்கு

அடிக்கடி நோய் வருவது

அந்தக் கிழவியின் சாபம்தான் என்கிறார்கள்.

அதுதான் அன்னதானம் செய்கிறோம் என்றாள்.

வேட்டி தானம் செய்கிறாயே எதற்கு என்று கேட்டாள்?

எங்க அப்பாவுக்கு வெள்ளை வேட்டி என்றால்

மிகவும் இஷ்டம்?

அதனால் தான் செய்கிறேன் என்றாள்.

ஒருவர் போனபிறகு

காலம் கடந்து

அவருக்கு விருது கொடுப்பதிலும்

விருந்து கொடுப்பதிலும்

நாம் இந்நாட்டு மன்னர்கள்.

                                           ———–அரங்க. குமார்

                                                       சென்னை- 600 049.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *