சீதாராமன் (புதுக்கவிதை)

சீதாராமன் (புதுக்கவிதை)

சீதாராமன்
seetharaman
சீதாராமன்

நகரவாசி இராமனை

அயோத்தி மாநகரம்

அழுதுகொண்டே அனுப்பிவைத்தது.

வனவாசி இராமனுக்கு

வானமே கூரை ஆனதால்

எல்லைகள் அற்றுப்போனதால்

வானமும் வசப்பட்டது!

வையமும் வசப்பட்டது!

இராமன்

அயோத்தி இராமனாக மட்டுமிருந்தால்

நாட்டைப் பார்த்திருக்க வேண்டும்;

மக்களைப் பார்த்திருக்கவேண்டும்;

அயோத்திராமன்

சீதையை மட்டுமே பார்த்திருந்தான்;

அன்பு வளர்ந்தது.

சீதாராமன் ஆனான்!

வனவாசி ராமன்

சீதைக்காக வாழ்ந்திருந்தான்.

சீதையின் ஆசையை நிறைவேற்ற

மானைத் துரத்தினான்.

மானைக்கொன்றான்.

பெண்மானை இழந்தான்.

சீதைக்காக அழுதான்; புலம்பினான்;

தவித்தான்; கலங்கினான்;

தன்னைப் போலவே

நாட்டையும் மனைவியையும்

இழந்து தவித்த சுக்ரீவனிடம் நட்புகொண்டான்;

அவனுக்காக வாலியைக் கொன்றான்;

சீதைக்காக

இலங்கை மீது போர்தொடுத்தான்;

வென்றான்;

வீடு திரும்பினான்;

காட்டினில் அவன் வாழ்ந்த

பதினான்கு வருடங்களும்

சீதாராமனாகவே வாழ்ந்தான்;

இராஜாராமன் ஆனபொழுது

rajaraman
இராஜாராமன்

இராஜதர்மம் குறுக்கிட்டது;

இராஜ நியதிகள் குறுக்கிட்டன;

மக்களுக்காக வாழ்ந்தான்;

மக்களின் கோணத்தில் யோசித்தான்;

மனைவியைப் பிரிந்தான்;

மனையறம் துறந்தான்;

இல்லறம் வாழ்பவர்கள்

சீதாராமனைப் பின்பற்றவேண்டும்.

கானகம் செல்லவேண்டிய தேவையில்லை;

நல்லாட்சி செய்ய விரும்புபவர்கள்

இராஜாராமனைப் போல் வாழவேண்டும்;

மக்களுக்காக வாழவேண்டும்;

தம்

மனைவி மக்களுக்காக அன்று;

 

 ——–அரங்க. குமார்.

                         சென்னை – 600 049.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *