பனிப்போர்வையடி உன்னுருவம் – உன்னைப்
பார்த்தாலே மற்றவைகள் மங்கிப்போகும்;
தனிப்பார்வையடி உன்பார்வை – வெம்மை
தணியாதோ தகிக்கிறதே செங்கதிராய்!
கனிக்கோவையடி உன்னிதழ்கள் – கிளி
கண்டாலே கொத்திடுமே கவனங்கொள்க!
தமிழ்ப்பாவையடி நீயெனக்கு – என்னைத்
தருவேனே கவியெனவே மறுத்திடாதே!
விழிப்பார்வையிலே கொன்றுவிட்டு – உயிர்
மீட்டிடுவாய் புன்னகையால்
கவிப்பார்வையிலே பிரமனும்நீ – கொடுங்
காலனும்நீ என்றுரைப்பேன்;
நிலவெனவும் கதிரெனவும் – உன்
நீள்விழிகள் மாறுவதேன்?
குலவுகிற நேரமிது – உனக்குக்
குடைப்பிடிக்க நேரமில்லை!
களவெனவும் கற்பெனவும் – தொல்
காப்பியத்துள் கண்டதடி!
உளந்தனிலே புரியவில்லை! – நீ
ஓர்நொடியில் புரியவைத்தாய்.
கற்றுத் தெளிவதில்லை காதல்!
கல்லாமல் கற்பதுவே!
கற்றபின் மறப்பதில்லை காதல்!
காலமெல்லாம் கூடவரும்!
—அரங்க. குமார்