வாழு! வாழவிடு! [ புதுக்கவிதை ]
[ குறிப்பு]:
உண்மை நிலை! படித்துவிட்டு மறந்துவிடுங்கள் !]
இலஞ்சம்
கௌரவத்தின் அடையாளம்.
இலஞ்சத்தின் அளவு
அதிகாரத்தின் உயர்வைக் கட்டுகிறது.
இலஞ்சம் வாங்கும் ஊரில்
இலஞ்சம் வாங்காதவன்
ஒப்புரவு ஒழுகாதவன்!
இலஞ்சத்தை ஒழிக்க நினைப்பவர்கள்
மற்றவர்களின் வளர்ச்சியைப் பொறுக்காத
அழுக்காறு உடையவர்கள்.
இலஞ்சம் வாங்காதவர்கள்
எண்ணிக்கையில் சிறுபான்மையினர்!
கட்சியின் பெரும்பான்மையைக் கோரும்
பாராளுமன்றமே!
எங்களின் பெரும்பான்மையைக் கருதி
எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று
இலஞ்சம் வாங்குவதை சட்டமாக்கு!
இலஞ்சம் வாங்குவதில்
உச்சவரம்பு கூடாது!
இலஞ்சத்தை வெறுப்போரே!
வாழுங்கள்! வாழவிடுங்கள்!
----- அரங்க. குமார்
சென்னை- 600049.
Just another WordPress site