குற்றம்

குற்றம்

கோடிகோடியாய்    சம்பாதித்து

பட்டுமஞ்சத்தில் படுத்துத் தூங்கினாலும்

அவ்வப்போது தரையில் அமர்ந்து பழகவேண்டும்.

அப்பொழுது தான் தாயின் மடியில் படுத்து உறங்கிய

நினைவு வரும்.

 

பழையதை  மறப்பவனும் 

பெற்ற தாய் தந்தையை மறப்பவனும்  ஒன்றே;

இன்று  நீ சக்கரவர்த்தியாகவே இருந்தாலும்

வருங்காலம்

உன்னை பரண் மீது மூட்டை கட்டிப் போட்டுவிடும்;

 

காந்தி  தேசத்தில்

காந்திக்கே  மதிப்பில்லை;

நீ எந்த மூலை?

 

புதியதை வரவேற்பதற்காக

பழையதை விற்றுவிட 

உறவுகள் என்ன கட்டில் மெத்தை தலையணைகளா?

 

உன்னை குப்பைத்தொட்டியில் போட்ட

அம்மாவை நீ வெறுக்கலாம்.

உன் தாயுடன் படுத்துவிட்டு ஒடிப்போன

அப்பாவை வெறுக்கலாம்;

 

ஆனால்

உன்னை ஒழுங்காகப் படிக்கவைத்து ஆளாக்கிய

பெற்றோர்களை முகவரி இல்லாமல் செய்வது

என்ன தர்மம்? 

 

தாய் தந்தையின்றி

காப்பகங்களில் பிள்ளைகள் வளர்வது

பிள்ளைகள் குற்றமன்று;

 

உன்னை அனாதை ஆக்காத

பெற்றோர்களை

காப்பகங்களுக்கு அனுப்புவது

குற்றம்.

மன்னிக்கமுடியாத குற்றம்.

                                                                       —- அரங்க குமார்.

                                                                               சென்னை –  600 049.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *