குற்றம்
கோடிகோடியாய் சம்பாதித்து
பட்டுமஞ்சத்தில் படுத்துத் தூங்கினாலும்
அவ்வப்போது தரையில் அமர்ந்து பழகவேண்டும்.
அப்பொழுது தான் தாயின் மடியில் படுத்து உறங்கிய
நினைவு வரும்.
பழையதை மறப்பவனும்
பெற்ற தாய் தந்தையை மறப்பவனும் ஒன்றே;
இன்று நீ சக்கரவர்த்தியாகவே இருந்தாலும்
வருங்காலம்
உன்னை பரண் மீது மூட்டை கட்டிப் போட்டுவிடும்;
காந்தி தேசத்தில்
காந்திக்கே மதிப்பில்லை;
நீ எந்த மூலை?
புதியதை வரவேற்பதற்காக
பழையதை விற்றுவிட
உறவுகள் என்ன கட்டில் மெத்தை தலையணைகளா?
உன்னை குப்பைத்தொட்டியில் போட்ட
அம்மாவை நீ வெறுக்கலாம்.
உன் தாயுடன் படுத்துவிட்டு ஒடிப்போன
அப்பாவை வெறுக்கலாம்;
ஆனால்
உன்னை ஒழுங்காகப் படிக்கவைத்து ஆளாக்கிய
பெற்றோர்களை முகவரி இல்லாமல் செய்வது
என்ன தர்மம்?
தாய் தந்தையின்றி
காப்பகங்களில் பிள்ளைகள் வளர்வது
பிள்ளைகள் குற்றமன்று;
உன்னை அனாதை ஆக்காத
பெற்றோர்களை
காப்பகங்களுக்கு அனுப்புவது
குற்றம்.
மன்னிக்கமுடியாத குற்றம்.
—- அரங்க குமார்.
சென்னை – 600 049.