காதல் செய்வோம்!

காதல் செய்வோம்!

நான் உன்னைப் பார்க்கவில்லை;

நீ என்னைப் பார்க்கவில்லை;

ஊருக்குத் தெரியாது;

உற்றார்க்கும் தெரியாது;

நீ உன் வேலையைச் செய்வாய்;

நான் என் வேலையைச் செய்வேன்;

என் மகள் குனிந்த தலை நிமிரமாட்டாள் என்று

உன் அம்மா சொல்லுவாள்;

என் மகன் அக்கம் பக்கம் பார்க்க மாட்டான்;

என்று என் அம்மா சொல்லுவாள்;

நாம் கண்ணுக்குத் தெரியாத காதல் வலை

பின்னிக்கொண்டிருப்போம்;

காதல் வலை மெல்லிய துணியாக மாறும்;

அப்பொழுது மற்றவர் கண்களுக்குத் தெரியும்’

அப்பொழுது எல்லாரும் வேண்டாம் என்பார்கள்’

அப்படிச் சொன்னால் தான் அவர்கள் உறவுகள்;

இழை இறுகும்;

அறுக்கப் பார்ப்பார்கள்;

இழை இறுகிக் கம்பிகளாய் மாறும்;

வெட்டப் பார்ப்பார்கள்;

யாரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக

இரும்புத் தகடாய் மாறும்;

உடைக்கப் பார்ப்பார்கள்;

நாம் வீட்டை விட்டு ஒடும்போழுதுதான்

எல்லாரும் ஏளனமாய்ப் பார்ப்பார்கள்;

முதல் குட்டு உன் மேல் விழும்;

கல்யாணம் பண்ணிவைக்கிற வரையிலும்

உனக்குப் பொறுத்திருக்க முடியாதா

என்பார்கள்;

உலகம் அப்படித்தான் சொல்லும்;

காதல் வந்து விட்ட பிறகு

எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருப்பது;

எத்தனை நாள் மனதுக்குள்

அடைகாத்துக் கொண்டிருப்பது;

ஒரு நாள் குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு

வெளிவரத்தானே வேண்டும்;

பொறுத்திருக்கும் தவம் எல்லார்க்கும் வராது;

நமக்கென்று எந்த லட்சியமும் கிடையாது;

இலட்சியத்தைக் கட்டிக் கொண்டு

எத்தனை பேர்கள் அழுகிறார்கள்;

எனக்கு நீ வேண்டும்;

உனக்கு நான் வேண்டும்;

இதுதான் நம் லட்சியம்;

ஒருநாள் கரை உடைகிறது;

வெள்ளம் பாய்கிறது;

வெள்ளத்தின் வேகம் தணிய சில நாட்கள் போதும்;

காதலின் வேகம் தணிய சில மாதங்களாவது ஆகும்;

அப்புறம் நம்மை பற்றி யோசிப்போம்;

இன்னும் கொஞ்ச காலம்

கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாமோ ?

அதுவரையில் யாருக்கும் தெரியாமல்

தொட்டுக் கொண்டு தடவிக் கொண்டு

காலந் தள்ளி இருக்கலாமோ?

என்னவோ வெளியில் வந்து விட்டோம்;

வாழ்ந்து பார்க்கலாம்;

அதனால் தான்

சில புத்திசாலிகள்

வாழ்க்கைக்குத் தேவையானவைகளை

முன்னேற்பாடாக செய்து கொண்டு

காதலிக்க ஆரம்பிக்கிறார்களோ?

அதனால் தான் அவர்கள் அதுவரை

காதலைப் பற்றி நினைப்பதில்லையோ?

எது என்னவோ?

வெளியில் வந்து விட்டோம்;

நாமும் அவர்களும் ஒன்றா?

எனக்கும் பொறுமையில்லை;

உனக்கும் பொறுமையில்லை;

வந்து விட்டோம்;

வாழ்ந்து பார்க்கலாம்;

இனி நேரம் கிடக்கும்போது காதல் செய்வோம்!

 

                                      —— அரங்க குமார்

                                                சென்னை – 600 049.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *