வாழ்க காதல் சாதி! (புதுக்கவிதை)
ஊருக்கு உண்மைகள் சொல்வேன்;
என் மனதில் பட்ட உண்மைகளைச் சொல்வேன்;
அந்த பாரதி துணையிருக்க வேண்டும்;
சாத்திரங்களின் பெயரைச் சொல்லி
சாதிகளைப் படைத்தாயிற்று;
அவற்றை சட்டப்படி பதிவு செய்தாயிற்று;
சாதிகளைக் காக்க
சங்கங்கள் வந்தாயிற்று;
ஒட்டுகள் வாங்க சங்கங்களின்
துணை தேவையாயிற்று;
இன்று
சாதி இல்லாமல் அரசியல் இல்லை;
காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் சாதி
தேவையில்லை.
மற்ற எல்லாவற்றிற்கும் சாதி தேவைப்படுகிறது;
கவிஞர்களும் தலைவர்களும்
சாதியினைப் பழித்துவைத்தால்
அவர்கள் செத்த பின்னால் அவர்களை
நம் சாதிக்காரன் என்றிடுவோம்;
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த
தமிழ் நாட்டில் இன்று
சங்கம் அமைத்து சாதிகள் வளர்க்கின்றோம்;
சங்கம் வளர்ந்தால் ஒட்டு வங்கி வளர்கிறது;
ஒட்டுவங்கி வளர்ந்தால் சலுகைகள் கைகூடும்.
சாதிகள் சட்டமாக்கப்பட்டுவிட்ட திரு நாட்டில்
சாதிகள் ஒழிய வேண்டும் என்று கூப்பாடு
போடுவானேன்;
காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் சாதி
தேவையில்லை;
எல்லாரும் காதலிக்க ஆரம்பித்து விட்டால்
சாதிகள் அழிந்து விடும் என்கிறீர்களா?
எல்லார்க்கும் காதல் வரும்;
ஆனால் வாயைவிட்டு வெளியில் வராது;
சிலர் தாய்தந்தை வழியில் செல்வோம் என்று
நினைப்பார்கள்;
சிலர்க்கு தைரியம் வராது;
தைரியம் வந்தாலும் வீட்டை விட்டு ஓடத்தானே
செய்கிறார்கள்;
காதலர்கள் மட்டுமே சாதி தேவை இல்லை
என்பார்கள்;
காதல் வாழ காதலர்கள் வெட்டுப்பட வேண்டுமா?
சம்பந்தப்பட்டவர்கள் செத்துப் போனபின்
காதல் எங்கே வாழ்கிறது?
காதல் ஆங்காங்கே பூக்கும்; காய்க்கும்; கனியும்;
சில பூவிலே உதிரும்;
சில காயிலே உதிரும்;
சில கனியிலே உதிரும்;
சில மட்டுமே சந்தைக்கு வரும்;
சில சந்தைக்கு வந்தபின் அழுகிப் போகும்;
சில மட்டும் தான் வீட்டுக்குப் போகும்;
காதல் படங்களில் ஓடும்;
காதலர்கள் ஓடுவார்கள்;
சாதி மட்டுமே நின்ற இடத்தில் நின்று
வெற்றிக் கொடி நாட்டும்;
வாழ்க சாதி! வாழ்க குலம் கோத்திரங்கள்!
வாழ்க காதல்சாதி!
வாழ்க சாதிக்காதல்!
சாதிக் யாரென்று கேட்காதீர்கள்;
சாதியைக் காதலிப்பதைத் தான்
சாதிக்காதல் என்று சொன்னேன்;
வாழ்க காதல் கவிதைகள்!
காதல் படங்கள் வெற்றி பெறட்டும்!
வாழ்க எங்கோ சில உண்மையான காதலர்கள்!
— அரங்க குமார்
சென்னை – 600 049.