நெஞ்சில் பூத்த மலர் (மரபுக்கவிதை)

நெஞ்சில் பூத்த மலர் (மரபுக்கவிதை)

 

துள்ளிச் செல்லும் வயதில் – ஒருநாள்

       துடுக்கடங்கிச் சென்றாய்;

பள்ளிச் சென்ற பொழுது – உன்னை

       பார்த்தவண்ணம் நின்றேன்.

 

மின்னி மினுக்கும் விழிகள் – மெல்ல

       விரிந்துமூடக் கண்டேன்;

கண்ணை நோக்கும் கண்கள் – அன்று

       மண்ணை நோக்கக் கண்டேன்.

 

காலை பூத்த பூவில் – மேலும்

       அழகுசேர்த்த பனிபோல்

காலைப் பார்க்கும் நாணம் – உன்றன்

       கண்ணைப்பார்க்கத் தூண்டும்.

 

மரபில் பூத்த மலரே! – நடையில்

       மாயஞ்செய்து சென்றாய்;

நினைவில்நிற்கும் வண்ணம் – என்றன்

       நெஞ்சிலெழுதிச் சென்றாய்.

 

காலம் மாறிப் போச்சு – நம்

       கனவும்மாறிப் போச்சு!

கோலம் மாறிப் போச்சு – நம்

       கொள்கைமாறிப் போச்சு!

 

சென்று விட்ட காலம் – என்றும்

       திரும்பவருவ தில்லை;

அன்று பூத்த மலரே! – இன்றும்

       மனதில்வந்து செல்வாய்;

                                                                                —–    அரங்க குமார்

                                                                                             சென்னை – 600 049.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *