Category Archives: இலக்கியம்

கவிதை, கட்டுரை, நூல்கள்

நாய்ப் பாசம்

நாய்ப் பாசம்

நாய்ப் பாசம்

நாய்ப் பாசம்

 

இங்கே உட்கார்ந்து கொண்டு இரும்மா

உனக்கு நான் டிபன் வாங்கிக் கொண்டு

வருகிறேன்”  என்று தாயை

சித்தூரில் தொலைத்துவிட்டு

செங்கல்பட்டு வந்து விட்ட மகனிடம்

அவன் மனைவி

அழுது கொண்டே சொன்னாள்

நம் நாய் ஜிம்மியைக் காணோம்” என்று.

அவன் எங்காவது போயிருப்பான்.

தானாய் வந்துவிடுவான்” என்ற கணவனிடம்

அவனை நான் நாயாகவா வளர்த்தேன்.

என் சொந்தப் பிள்ளையைப் போலல்லவா வளர்த்தேன்”

என்று அழுதாள்.

கவலைப்படாதே! அவனைக் கண்டுபிடித்து

கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5000/- பரிசு

என்று இந்த ஊர் முழுவதும்

அறிக்கை ஒட்டிவிடுகிறேன்”

என்றான் பாசமுள்ள கணவனாக.

                                    ——- அரங்க. குமார்.

                                           சென்னை – 600049.


 

 

 

தமிழனாக்கினாய் !

தமிழனாக்கினாய் !  (புதுக்கவிதை)

 அன்பே!

என் காதலை

கவிதையாக்கிச்   சொன்னேன்!

 

நீயோ

நான் எப்பொழுது

பிழையில்லாமல்

கவிதை   எழுதுகிறேனோ

அப்பொழுது

என் காதலை

ஏற்றுக் கொள்வதாகக்

கூறிவிட்டாய்.

 

இன்று

நான் தமிழாசிரியன்

ஆகிவிட்டேன்!

நீயோ

உன் பிள்ளைக்குத்

தமிழ் கற்றுத்  தரச்சொல்லி

வந்து நிற்கிறாய்!

                         ———– அரங்க. குமார்.

                                      சென்னை – 600 049.

தப்புத் தப்பாக

தப்புத் தப்பாக (புதுக் கவிதை)

கண்ணே!
உன்னைக் காதலித்தேன்.
நீ மறுத்துவிட்டாய்.
நான் தற்கொலை செய்துகொள்வேன்
என்று நீ நினைத்தாயோ?

உன் நினைவாக
என் காதலை
இந்த இரயில் பெட்டியில்
தப்புத்தப்பாகக்
கிறுக்கி வைத்துவிட்டு
அடுத்தப் பெட்டிக்குப் போவேன்!
அங்கு
வேறொரு புதுக்கவிதை எழுதுவேன்!
தப்புத்தப்பாக….
                           —- அரங்க. குமார்.

அழகு

அழகு   (விருத்தக் கவிதை )

 மின்னிடும்   விழிகள்   அழகோ?

மீதுள   புருவம்   அழகோ?

தின்னிடத்   தோன்றும்   இனிய

தேன்சுவை   இதழ்கள்   அழகோ?

விம்மிடும்   பெண்மை   அழகோ?

மெல்லிய   இடைதான்   அழகோ?

எவ்விதஞ்   சொல்வேன்   என்றன்

விழிகளில்   நீயே   அழகு!

 

விரிந்தது   மயிலின்   தோகை

சிலிர்த்தது   மேகங்  கண்டா?

விரும்பிய   பேடை  கண்டா?

எறும்புகள்   கரும்பை    நாடும்;

அரும்பினை   வண்டு   தேடும்;

பிறந்தயிவ்   உலகந்   தன்னில்

விரும்புதல் இல்லை என்றால்

வெறுப்புதான் மிஞ்சும் வாழ்வில்!

 

வில்லினைப்   புருவமாக்கி    வேலினை   விழிகளாக்கி

மெல்லித   ழிரண்டினையும்  மாங்கனிச்   சுளைகளாக்கி

விம்மிடும்   அழகிரண்டை   கோபுரக்   கலசமாக்கி

பிடியிடை யென்றுகூறி   நடையினில்   அன்னமாக்கி

செந்தொடை   மீதுயெந்தன்   சிரசினை   வைத்தெனக்கு

நிம்மதி   தருவதிங்கு   நின்மடி   யென்றுரைத்து

பொற்பதங்   களைப்பற்றி   யற்புத   மென்பதெல்லாம்

கற்பனை   யன்றுகாதல்  செய்கிற   சித்துதானே!

 

                                 ———அரங்க.குமார்

                                            சென்னை –  600049.

முரண்பாடுகள்

முரண்பாடுகள் ( புதுக்கவிதை )

பருந்தும் புறாவும்
பருந்தும் புறாவும்

புறாவும் பருந்தும்

சமாதானம் ஆவது எப்பொழுது?

சமத்துவக் கூட்டில்

வாழ்வது எப்பொழுது?

பருந்துக்குப் பசி எடுக்காமல்

பார்த்துக் கொள்ளும் வரையிலா?

சிங்கமும் மான்குட்டியும்
சிங்கமும் மான்குட்டியும்

 

காட்டில் ஒரு சிங்கம்

ஒரு மான் குட்டியைப் புரட்டி விளையாடியது.

என்  கடைவாய்ப் பல்லுக்குக் கூட

போதமாட்டாய் என்று

சலித்திருக்குமோ?

தான் ஈன்ற குட்டியை நினைத்து

பரிதாபப்பட்டு இருக்குமோ?

சிங்கத்துக்கும் மனம் உண்டு.

மாறும் மனம்.

  ———– அரங்க. குமார்.
                        சென்னை – 600049

செருப்பு [புதுக் கவிதை]

 

சக்கிலியன்
COBBLER

செருப்பு  [புதுக் கவிதை]

சித்திரை மாதம்

உச்சி வெயிலில்

ஆற்று மணலிலும்

தார்ச் சாலைகளிலும்

வெறும் காலில் நடந்து பார்த்தவர்களுக்குத் தெரியும்

சூட்டின் தன்மை.

பரதம் அறியாதவர்களும்

ஆடிக் காண்பிப்பார்கள்.

 

சிறு பிள்ளைகளாய் இருந்தால்

வீரிட்டு அழுவார்கள்.

கிராமவாசிகள்

வேலமரத்து முள்ளோ, நெருஞ்சி முள்ளோ

குத்தினால் எப்படி இருக்கும் என்பதை அறிவார்கள்.

மருத்துவ வசதி இல்லாமல்

உள்ளே சென்றுவிட்ட முள்ளை

எடுக்க முடியாமல்

குத்தின இடத்தில்

அரைத்த மஞ்சளையோ உப்பையோ

வைத்து சுடும்பொழுது

ஏற்படும் வலியை எப்படிச் சொல்வது?

சீழ்ப் பிடித்து இரணசிகிச்சை வரை செல்லும் பொழுது

உழைப்பாளிக்கு உழைப்பும், நேரமும் பொருட்செலவும்

வீண் தானே?

 

ஒரு சோடி செருப்பு வாங்கமுடியாமல்

எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

இத்தனைக்கும் செருப்பை

வீட்டிற்குள்ளா கொண்டு செல்கிறோம்?

செருப்புதானே என்று இழிவாகப் பேசுகிறோம்.

செருப்பு நாடாண்டு இருக்கிறது.

செருப்பு சட்டசபையிலும்

பாராளுமன்றத்திலும்

மந்திரிகளை அவமானம் செய்கிறது.

 

ஆண்டவனுக்குத்

தங்கத்தில் பாதுகைகள் செய்தால்

தொட்டு வணங்குகிறோம்.

 

செருப்பை செய்பவன் வளர்ந்தானா?

எங்கெங்கோ வீண் செலவு செய்துவிட்டு

சக்கிலியனிடம் பேரம் பேசி சண்டைப் பிடிப்பார்கள்.

                                                             ————அரங்க. குமார்

 

மிதிவண்டி [புதுக் கவிதை]

 

bicycle
மிதிவண்டி

மிதிவண்டி

சிவனுக்கு வாகனம் எருது.

திருமாலுக்கு வாகனம் கருடன் .

முருகனுக்கு வாகனம் மயில்.

இப்படியாக எனக்கு வாகனம் மிதிவண்டியாயிற்று.

அதனால்

நான் கடவுளல்ல.

என் பொருளாதாரம்

எனக்கு மிதிவண்டியை  மட்டுமே சொந்தமாக்கியது.

மிதிவண்டி எனக்கு ஓர் அற்புதமான தத்துவத்தை விளக்கியது.

ஒவ்வொரு முதலாளியின் பின்னாலும்

பல தொழிலாளிகளின் உழைப்பு இருக்கும்.

மிதிபடுவதும் உழைப்பதும் பின்சக்கரம்.

இலகுவாகச்  செல்வது முன்சக்கரம்.

முன்சக்கரமும் , பின்சக்கரமும்

உழைப்பு என்ற சங்கிலியால் பிணைக்கப்படவில்லை.

அதிகாரம் என்ற இரும்புச் சட்டத்தினாலேயே இணைக்கப்பட்டுள்ளது.

நடுவில் உள்ள நாம் இடைத்தரகர்கள்.

என்

மிதிவண்டி

என் புகை பிடிக்காத நண்பன்.

சுற்றுச்சூழலைப்  பாதிக்காதவன்.

நானும் காற்றைச்  சுவாசிக்கிறேன்.

அவனுக்கும் காற்று அவசியம்.

என் உழைப்பிற்கேற்ப

எங்கு வேண்டுமானாலும் கொண்டுசெல்வான்.

எனக்கு வீண் செலவு வைக்காத நண்பன்.

அவன் ரப்பர் பாதங்களை

கல்லும், முள்ளும் குத்திக் கிழிக்கும் பொழுது மட்டுமே

அவனுக்கு  நான் வைத்தியம் செய்கிறேன்.

 

அவன் என்னை மட்டுமா சுமந்து செல்கிறான்.

என் நண்பனையும், உறவுகளையும்

மறுக்காமல் சுமக்கிறான்.

என் வழிகாட்டுதலிலேயே அவன் செல்கிறான்.

மேட்டில் ஏறும் பொழுது

அவன் சிரமப்படுவான்.

நானும் அவனோடு சேர்ந்து உழைப்பேன்.

பள்ளத்தில் பாய்ந்து செல்வான்.

நான் அவன் காதுகளைத் திருகி

மட்டுப்படுத்துவேன்.

யாராவது வழியில் குறுக்கிட்டால்

அவனைச் சுண்டினால் போதும்.

சத்தம் போட்டு விரட்டுவான்.

என் மிதிவண்டி என் பிள்ளைகளுக்கும் நண்பன்.

 

                                                             ————அரங்க. குமார்

வள்ளுவர் கூறியுள்ள பொருள் பற்றிய கருத்துக்கள்

பொதுவாக கற்றறிந்தவர்கள் சபைக்கு அதிகம் கல்லாதவர்களோ அல்லது அறிவிலிகளோ சென்று பேச முற்படுவது மடைமை என்று பெரியோர்கள் கூறுவர். வள்ளுவரும் இதை வலியுறுத்திக் கூறியுள்ளார். அவையறிந்து பேசவேண்டும் என்பார்.  மதுரை தமிழ்ச் சங்கத்தில் தருமி என்ற அரைகுறையாக கற்றறிந்த புலவன் அவமானப்பட்ட கதையை தமிழுலகம் அறியும். ஆண்டவனே ஆனாலும் குற்றம் குற்றமே என்றார் நக்கீரர் என்ற புலவர்.

   பிண்ணாக்கு வியாபாரம் செய்து பெரிய கோட்டீஸ்வரரான  ஒருவர் தன்னிடம் உள்ள மிகுதியான பணத்தைக் கொண்டு ஒருகல்லூரிதொடங்கலாம். அதைத் தவறு என்றும்கூறமுடியாது. ஒரு கல்லூரி என்றாலே அதில் மெத்தப்படித்த அனுபவம் வாய்ந்த ஒருவர் முதல்வராக இருப்பார். ஒரு துணைமுதல்வர் இருப்பார். பேராசிரியர்கள் பலர் இருப்பார்கள். எழுத்தர்கள், கணக்கர்கள் என்று படித்த பல பேர்கள் வேலை செய்வார்கள். இந்தப் பதவிகளில்  எல்லாம் படித்தவர்கள் மட்டுமே வேலை செய்ய முடியும். ஒரு கல்லூரி விழாவில் அனைவரும் குழுமி  இருப்பார்கள். அப்பொழுது கல்லூரியின் நிறுவனர் வந்தால் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். இங்கு அதிகம் படிப்பறிவில்லாத ஒருவர் தான் பெற்ற செல்வத்தினால் கற்றறிந்தவர்கள் மரியாதைசெய்யும் அளவிற்கு உயர்ந்து  நிற்கிறார்.         ஒருபொருட்டாக மதிக்கத் தகாதவரையும் மதிக்க வைக்கும் பொருளைவிடச் சிறந்த பொருள்  வேறுஒன்றும் இல்லை. இதைத்தான் திருவள்ளுவர்,

பொருளல்லவரைப்பொருளாகச்செய்யும்

  பொருளல்லதுஇல்லைபொருள்.”

என்று  உரைக்கின்றார்.        

 

 

பாரதியின் வழியில் …

 மகாகவி சுப்ரமணிய பாரதியார்
Maha Kavi Subramaniya Bharathiyar

    யாமறிந்த  புலவரிலே  கம்பனைப்போல்,                                                             –  வள்ளுவர்போல்

        இளங்கோ வைப்போல்,

பூமிதனில்   யாங்கணுமே   பிறந்ததில்லை,                   -உண்மைவெறும்

புகழ்ச்சி யில்லை,

ஊமையராய்ச்  செவிடர்களாய்க்   குருடர்களாய் -வாழ்கின்றோம்

ஒருசொற் கேளீர்!

சேமமுற  வேண்டுமெனில்  தெருவெல்லாம் -தமிழ்முழக்கம்

                                 செழிக்கச் செய்வீர்!……………………….   1

 

பிறநாட்டு   நல்லறிஞர்   சாத்திரங்கள்   தமிழ்மொழியிற்

 பெயர்த்தல் வேண்டும்

இறவாத   புகழுடைய   புதுநூல்கள்   தமிழ்மொழியில்

இயற்றல் வேண்டும்

மறைவாக   நமக்குள்ளே   பழங்கதைகள்  சொல்வதிலோர்

மகிமை   இல்லை

திறமான   புலமையெனில்  வெளிநாட்டோர் -அதைவணக்கஞ்

                                           செய்தல்  வேண்டும்.  …………………………….. 2

 

உள்ளத்தில்   உண்மையொளி  யுண்டாயின்   வாக்கினிலே

ஒளியுண்  டாகும்

வெள்ளத்தின்  பெருக்கைப்போல்  கலைப்பெருக்கும் -கவிப்பெருக்கும்

மேவு  மாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்  -விழிபெற்றுப்

பதவி  கொள்வார்,

தெள்ளுற்ற   தமிழமுதின்   சுவைகண்டார்  இங்கமரர்

                                               சிறப்புக்   கண்டார்……………………………. 3

 

யாமறிந்த  மொழிகளிலே  தமிழ்மொழிபோல் -இனிதாவது

எங்கும்  காணோம்,

பாமரராய்    விலங்குகளாய்,   உலகனைத்தும் -இகழ்ச்சிசொலப்

பான்மை  கெட்டு,

   நாமமது   தமிழரெனக்  கொண்டு இங்கு   வாழ்ந்திடுதல்

நன்றோ?  சொல்லீர்!

 தேமதுரத்    தமிழோசை  உலகமெலாம்   பரவும்வகை

                                    செய்தல்   வேண்டும்…………………………… 4

 

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் .