எண்ணங்கள் [ புதுக்கவிதை]
மனதை
இரும்பாக்கி இளகவைத்து
கரும்பாக்கிக் கசக்க வைக்கும்
இரசவாத எண்ணங்களே!
உங்களை
எனதாக்கிக் கொண்டுவிட்டால்
வசமாகும் உள்ளங்களே!
—————அரங்க. குமார்
சென்னை – 600049
எண்ணங்கள் [ புதுக்கவிதை]
மனதை
இரும்பாக்கி இளகவைத்து
கரும்பாக்கிக் கசக்க வைக்கும்
இரசவாத எண்ணங்களே!
உங்களை
எனதாக்கிக் கொண்டுவிட்டால்
வசமாகும் உள்ளங்களே!
—————அரங்க. குமார்
சென்னை – 600049
காதலும் கவிதையும்(புதுக்கவிதை )
மரத்தை உலுக்கி
தென்றலை
வரவழைக்க இயலாது!
தன்னிச்சையாய் வருவதே
காதலும் கவிதையும்.
—————அரங்க. குமார்
சென்னை – 600049
தேர்தல் [ சிந்துக் கவிதைகள்]
தேறுதல் சொல்லவே வந்துவிட்டார் – நாட்டின்
தேர்தல் என்றொரு சொல்லினிலே
ஆறுதல் கொள்ளுங்கள் மக்களெல்லாம் – அவர்கள்
அண்டி வருவது இப்பொழுதே………………………………1
மாறுதல் வந்திடும் என்றிடுவார் – அவர்கள்
வாழ்வில் என்றதன் பொருளாகும்.
மீறுதல் என்பதே இலட்சியமாம் – வாக்கை
மீறுதல் இரத்தத்தில் ஊறினதே…………………………….2
வெள்ளை மயமென வந்திடுவான் – அது
வெள்ளைக் கொடியென உணர்ந்திடுக
கொள்ளை யடிப்பவன் வந்திடுவான் – பாலின்
வெண்மைச் சிரிப்புடன் வந்திடுவான்…………………3
மெட்டு வேறு:
குடிசைகளில் அடுப்பெரியும் – வாக்கைக்
கொடுக்கும் வரையில்;
குடிசைகளே தாமெரியும் – வாக்கைக்
கொடுத்த பின்னால்;…………………………………………….4
தெருக்களிலே கொடிபறக்கும் – தலைவர்
சித்திரங்கள் சுவர்களிலே;
கருக்கலிலே ஒலிமுழக்கம் – கேட்டுக்
காக்கைகளும் சிடுசிடுக்கும்;…………………………………5
மூப்படைந்த தெருக்களிலே – தலைவர்கள்
முகமலர வருவதற்கு;
வைத்தியங்கள் நடக்குமாடா – தலைவர்கள்
வருவதிலும் இலாபமுண்டு;………………………………..6
கட்சிப் புடவைகளோ – நம்
கண்ணைப் பறிக்குதிங்கே;
கட்டிப் பார்ப்பதற்கு – நாட்டில்
கன்னியரா பஞ்சம்? ………………………………….7
வெள்ளைக் கொடியில்லை – இருப்பின்
வேட்டிகள் கிடைத்திருக்கும்;
அள்ளிக் கொடுப்பதற்கு – தேர்தல்
வள்ளல்கள் கிடைத்தார்கள்;…………………………………..8
வாகனங்கள் வீட்டருகே – உங்களை
வரிந்து செல்ல
மோகனங்கள் பாடிடுவார் – உண்மை
புரிந்து கொள்க;………………………………………………………………..9
வீதிகளில் தமிழ் முழக்கம் – தமிழ்
வேட்கையிலே மறந்திடாதே
பாதியிலே போகுமடா – எல்லாம்
பதவிக்கு வந்த பின்னால்;……………………………………..10
என்சாதி என்றிடுவான் – எளிதில்
எளிதில் மயங்கிடாதே;
எஞ்சாது ஏதொன்றும் – நாட்டை
எலியாய்ச் சுரண்டிடுவான்;………………………………….11
பத்திரிக்கைச் செய்தி வரும் – அவரைப்
பாரியென பேகனென;
அத்திரைக்குப் பின்னாலே – அங்கு
நடப்பதனை யாரறிவார்;………………………………………………12
எப்பொருளைக் கேட்டாலும் – அதன்
மெய்ப்பொருளைக் கண்டிடுக;
இப்பொருளோ அதிகாரம் – நீ
எண்ணிடுக பலமுறைகள்;………………………………………….13
கொள்கைகளைக் கூறிடுவார் – உணர்ந்து
கொள்ளும் வேளையிலே
கொள்கையெல்லாம் மாறிவிடும் – பித்தம்
பிடித்துவிடும் உன்றனுக்கு………………………….14
மெட்டு வேறு:
தான்பெற்ற பிள்ளைக்கொரு பெயரை வைக்க – தங்கள்
தலைவனைத் தான்நாடுகிற கூட்டமிங்கே
யான்பெற்ற செல்வங்கள் பெறுகவென்று – மக்கட்கு
இசைவுற்று தருகின்ற தலைவருண்டோ?…………………..15
கணக்கொன்று இல்லாத இடமேயில்லை – அரசியற்
கணக்கென்று ஒன்றுஉண்டு; தாம்போடும்
கணக்கிங்கு தப்பிடுமென்று ஐயம்வந்தால் – சாதிக்
கணக்கொன்று போட்டிடுவார்;………………………………………16
மெட்டு வேறு:
நல்லதொரு காலம்வரும் – அன்று
நல்லவர்கள் விழித்திடுவார்;
சொல்லவொரு குறையுமின்றி – மக்கள்
சுகித்திருக்கும் காலம்வரும்;…………………………………………17
இளைஞர்களின் கூட்டமெழும் – கொள்கைப்
பிடிப்போடு வளர்ந்திருப்பார்;
களைகளைப் பிடுங்கிடவே – நல்லவொரு
கட்சியினைத் தோற்றுவிப்பார்;……………………………………18
சாதிகளைப் பணயம் வையார் – உயர்
சத்தியத்தை நம்பிடுவார்;
நாதியற்ற மக்களைத்தம் – தம்
நாடகத்தில் ஆட்டுவியார்;………………………………………………19
மேடைகளில் முழங்கிடுவார் – தம்
எதிரிகளைப் பழித்தன்று;
ஏழைகளும் ஏற்றம்பெற – தமிழ்
இசைஎங்கும் முழங்கிடவே;………………………………..20
விவசாயி [ புதுக் கவிதை ]
யாரவன் விவசாயி?
வெள்ளை வேட்டி
வெள்ளைச் சட்டை அணிந்து
நாற்காலியின் மேல்
கால் மேல் கால் போட்டுக்கொண்டு
வேலையாட்களை ஏவிக் கொண்டிருப்பவனா?
நூறு இருநூறு ஏக்கர்
நிலங்களுக்குச் சொந்தக்காரனா?
மேழி பிடிப்பவன்.
கெட்டிப்பட்ட மண்ணைக் கிளறி
பொடியாக்குபவன்.
நீரைப் பாய்ச்சி சேற்றைக் குழைப்பவன்.
விதைகளைத் தூவி நாற்று விடுபவன்.
நாற்றைப் பிடுங்கி நட்டு
களைகளைப் பறித்து பயிர் வளர்ப்பவன்.
இதற்காக அவன் அந்த நிலத்தின்
குறுக்கும் நெடுக்கும்
ஆயிரமாயிரம் தடவைகள் நடப்பவன்.
இன்று வேலை முடிந்து விட்டதென்று
நிம்மதியாக திண்ணையில் தூங்குபவனா?
பெண்பிள்ளையை வளர்க்க
ஒரு தாய் படும் அவஸ்தையைப் போல
மனசு தவிக்க
ஞாபகமெல்லாம் நிலத்தின் மீதே இருக்க
வீட்டிலிருந்து மறுபடியும்
வயலுக்கு ஓடிப்போய்
ஆடு மாடுகள் நிலத்தில்
இறங்கிவிட்டனவா என்று பார்ப்பவன்.
நெல்முற்றி அறுவடை செய்வதற்குள்ளாக
எவனாவது இரவோடு இரவாக
நிலத்தில் இறங்கி அறுவடை செய்துவிட்டால்
என்ன செய்வது என்று
இரவு அங்கேயே காவலிருப்பவன்.
வயசுக்கு வந்த கன்னிப்பெண்ணைக்
காப்பது போலக் காத்து வீட்டிற்கு
கொண்டு சேர்ப்பதற்குள்
படாதபாடுபடுபவன்.
இதன் நடுவே
பூச்சிகள் பிரச்சனை
உரப்பற்றாக்குறை,
தண்ணீர்ப்பற்றாக்குறை,
பம்ப்செட் ஓட்ட மின்பற்றாக்குறை
அண்டைநிலப்ப்ரச்சனைகள்
பல பிரச்சனைகள்
போதாது என்று
புயல் மழை வெள்ளம் என்ற
இயற்கைப் பிரச்சனைகளும்
சேர்ந்து கொள்ள
அவன்படும்பாடு பெரும்பாடாகும்.
அவன் வெய்யிலில் திரிந்து
மழைக்கு ஒதுங்காமல்
கரங்கள் காய்த்துப் போவது பற்றியோ
மேனி கருத்துப் போவது பற்றியோ
தலைமுடி வறண்டு போவது பற்றியோ
யோசிப்பவன் அல்லன்.
எட்டு மணி நேர வேலை
வாரக் கடைசியில் ஓய்வு
என்று எதிர்பார்ப்பவன் அல்லன்.
அவனுக்கும் பெண்டு பிள்ளைகள் உண்டு.
அவர்கள் பட்டாடைகளைப் பார்த்தறியாதவர்கள்.
அவன் மனைவி
அவனின் ஒவ்வொரு வேலையிலும்
தோளோடுதோள் கொடுப்பவள்.
அவன் செய்யும் ஒவ்வொரு வேலையையும்
அவளும் அறிவாள்.
கருக்கலில் எழுந்து
வீட்டைப் பெருக்கி
சாணி மெழுகி
மாட்டுதொழுவத்தை சுத்தம் செய்து
மாட்டுக்கு தவிடும் புண்ணாக்கும் வைத்து
தண்ணீர் காட்டி
பாலைக் கறந்து பானையில் வைத்து
கூழைக் கரைத்துக்
கணவனுக்கும் கொடுத்து
பிள்ளைகளுக்கு கொடுத்து
தானும் குடித்து
சிறு பிள்ளைகளுக்கு
அவரவர்க்குகந்த வேலைகள் கொடுத்து
கணவன் பின்சென்று
வேலைகள் செய்து
எப்பொழுது கழனியில் இருக்கிறாள்
எப்பொழுது வீட்டில் இருக்கிறாள்
என்பதை அறிய முடியாத அளவிற்கு
அங்குமிங்கும் அல்லல்பட்டு
அவள்படும் பாடும் பெரும்பாடே.
அவள்
எண்ணெய் வைத்து
கூந்தலைச் சீவி
பவுடர் பூசி
மை தடவி பொட்டிட்டு
பூச்சூடுவதேல்லாம்
அன்றாட வேலைகளல்ல.
அவள் பிள்ளைகளும்
அதை அறியார்கள்.
என்றோ ஒரு நல்ல நாள்
பண்டிகை என்று வந்தால்
உண்டு.
கோவில் திருவிழா என்று வந்தால்
மகிழ்வார்கள்.
ஷாப்பிங் அவர்களுக்குத் தெரியாது.
வருஷத்தில் எப்போதோ ஒருமுறை
சந்தைக்குப் போனால் உண்டு.
அதில் அவன் மகள்
கண்களை அகல விரித்து
அங்கு விற்பதை எல்லாம் பார்த்து
ஆச்சரியப் படுவதைப் பார்க்கவேண்டுமே.
அவளால் பார்க்கத்தான் முடியும்.
அவளுக்குப் பல வருடங்களாக
ஒரு மணிமாலை போட்டுக்கொள்ளவேண்டும்
என்ற ஆசை.
சிவப்புக் கலர் ரிப்பன்.
ரோஸ் கலர் தாவணி.
ஆரஞ்சு கலர் ரவிக்கை
அணிந்து கொள்ள வேண்டும் என்ற
ஆசையும் உண்டு.
பக்கத்துக்கு டவுனுக்கு
வாழ்க்கைப் பட்டுப் போன
அத்தை சென்ற வருடம் வரும் பொழுது,
முக்கால்வாசி தீர்ந்து போன
ஒரு பவுடர் டப்பாவைக்
கொடுத்து விட்டுப் போனாள்.
அது சென்ற பொங்கல் வரை வந்தது.
அவள் அம்மாவின்
கைகளைச் சுரண்டி
பச்சை கலர் ரிப்பன்
வாங்கித் தரும்படி கெஞ்சினாள்.
கணவனின் முகக் குறிப்பறிந்து
நடப்பவளான அவள் அம்மா
எப்படியோ போராடி வியாபாரம் பேசி
இரண்டு பச்சைக் கலர் ரிப்பன்களும்
சிவப்பு வளையல்களும்
வாங்கிக் கொடுத்தாள்.
அவள் முகம்
சந்தோஷத்தில் பளிச்சென்று ஆனது.
அவன் ஒவ்வொன்றும்
ஆனை விலை குதிரை விலை விற்கிறது
என்று பொருமினான்.
அவன் விளைவிக்கும் பொருட்கள் அனைத்தும்
திடீர் திடீர் என்று விலை உயர்வது இல்லை.
அத்தியாவசப் பொருட்கள் என்பதால்
உணவுப் பொருட்கள்
விலையேற்றம் எல்லாருடைய கவனத்திற்கும்
உடனே வந்து விடுகிறது.
காய்கறிகள் விலை ஏறும்.
ஆனால் அதற்கும் அவனுக்கும் எந்த
சம்பந்தமும் இருக்காது.
மழை இல்லை.
விளையவில்லை என்று
நடுவில் உள்ள வியாபாரி சொல்லுவான்.
விலை ஏற்றத்திற்கான
எல்லாக் காரணங்களையும்
வியாபாரிகள்தாம் சொல்லுவார்கள்.
விளைவிப்பவன்
சென்ற வருடம் கொடுத்ததைவிட
ஒரு பத்து ரூபாய் கூட கொடுத்தால்
சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போய்விடுவான்.
இந்தியாவில்
மோட்டார் கம்பெனிகளும்
கார் கம்பெனிகளும்
சாப்ட்வேர் கம்பெனிகளும்
தோல் கம்பெனிகளும்
பல்கிப் பெருகிவிட்டன.
பல வெளிநாட்டுக் கம்பெனிகளும்
வர ஆரம்பித்துவிட்டன.
வளர்ச்சி! வளர்ச்சி!
எங்கு பார்த்தாலும் வளர்ச்சி தான்.
ஊருக்கொரு போன்பூத்தென்ற
நிலை மாறி தெருவுக்கொன்று என்று வந்து
வீட்டிருகொரு மொபைல்
என்று வந்து விட்டது.
நகரில்தான் அத்துணை வளர்ச்சி.
கம்ப்யூட்டர் இன்டர்நெட் என்று
தொலைதொடர்புத் துறையில்
அசுர வளர்ச்சி.
தன் வீட்டில் எலுமிச்சை அளவு
தங்கம் வைத்திருந்த ஒருவனிடம்
நாடு எப்படி என்று கேட்டதற்கு
எல்லோரும் எலுமிச்சை அளவு
தங்கமேனும் வைத்திருக்கிறார்கள்
என்றானாம்.
நகரங்களின் வளர்ச்சியைப்
பார்த்துவிட்டு நாடு வளர்ந்துவிட்டது
என்று நினைக்கிறார்கள்.
இவர்கள் இந்தியாவின்
அத்தனை கிராமங்களையும்
பார்த்தறியமாட்டார்கள்.
தெரிந்தோ தெரியாமலோ
தமிழகத்தில் பெரும்பாலான
வீடுகளுக்கு கலர் டிவிக்கள் கொடுத்து விட்டார்கள்.
அதில் வரும் விளம்பரங்களைப்
பார்த்தால் நகரத்தார்க்கே
மூச்சு முட்டுகிறது.
கிராமத்தவரைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
உடம்பு முழுவதும் தங்கத்தால்
இழைத்தது போன்று
எல்லாவகையான நகைகளையும் போட்டுக்கொண்டு
ஒரு அழகான தங்கமங்கை தோன்றி
நீங்கள் வாங்கவில்லையா
என்று கேட்கிறாள்.
பட்டாடைகளைப் போட்டுக்கொண்டு
பதுமைபோல் பெண்ணொருத்தி
வாருங்கள் அள்ளிச்செல்லுங்கள்
என்கிறாள்.
அழகான நடிகைகள்
தங்களின் அழகின் ரகசியம்
இந்த சோப்பு ஷாம்பூ கண்ணாடியில் தாம்
இருக்கிறது என்கிறார்கள்.
மொபைலில்
இந்த ஆப்பை டௌன்லோடு செய்து
இருக்கும் இடத்திலிருந்தே
எல்லாவற்றையும் வாங்குங்கள்
என்கிறார்கள் அல்லது
இருக்கும் இடத்திலிருந்தே
எல்லாவற்றையும் விற்றுவிடுங்கள்
என்கிறார்கள்
இதுவெல்லாம்
ஏழைகளுக்கு அன்று
செல்வந்தர்களுக்கென்று
யதார்த்தவாத புரியலாம்.
டிவி வாங்கும்போது
விலையைப் பற்றி யோசிப்பதில்லை.
மொபைல் வாங்கும்போது
விலையைப் பற்றி யோசிப்பதில்லை.
பழைய மாடல் என்று சொல்லி
பழசைத் தள்ளி புதிது வாங்க தோன்றுகிறது.
எந்த நாகரீகப் பொருட்களின் விலையேற்றமும்
பெரிதாய்த் தோன்றுவதில்லை.
வெங்காயம் விலையேறிவிட்டது
என்ற குரல் டெல்லி வரை கேட்கிறது.
அரசாங்கமே கவிழ்கிறது.
காய்கறிகளின் விலையேற்றம்
அரிசி கோதுமைகளின் விலையேற்றம்
விவசாயியின் வாழ்வில்
எந்த ஏற்றத்தையும்
ஏற்படுத்தவில்லையே.
தக்காளி கிலோவிற்கு
பத்துருபாய் விலை கூடினால்
அந்த பத்து ருபாய்
நம் விவசாயியின்
உண்டியலுக்கா போகிறது.
உழைத்துத் தின்பவன்
நடந்து போகிறான்.
அவனிடம் வாங்கி விற்பவன்
காரில் போகிறான்.
உழத்திக்கு( உழவனின் மனைவி )
உடம்பு வீங்கவில்லை.
வியாபாரியின் மனைவி
தன் உடம்பை தானே சுமையாய்
நினைக்கும் அளவிற்கு
உடம்பு வீங்கி அதன் மீது
பட்டையும் தங்கத்தையும்
பகட்டாய் சுற்றிக்கொண்டு
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க
உட்கார்ந்தால் எழுந்திருக்க முடிவதில்லை.
எழுந்தால் உட்கார முடிவதில்லை.
குரல் கொடுப்பவர்கள் எல்லாம்
நகரங்களில் இருக்கிறார்கள்.
மாட மாளிகைகளில் வாழ்கிறார்கள்.
காரில் போகிறார்கள்.
காரில் வருகிறார்கள்.
விவசாயிகள் குரல் கொடுப்பதைப்
பார்த்திருக்கிறீர்களா?
மிஞ்சி மிஞ்சிப் போனால்
தண்ணீருக்கு குரல் கொடுப்பான்.
அவனுக்கு குரல் கொடுக்க நேரமேது?
மழைக் காலங்களில்
வாழைத்தோப்பு அழிந்துவிட்டதைக்
காண்பிப்பார்கள்.
விளைநிலங்கள் தண்ணீரில்
மூழ்கிவிட்டதைக் காண்பிப்பார்கள்.
இவர்கள் எல்லாம் நிலச்சுவாந்தாரர்கள் .
கால் காணிக்குச் சொந்தக்காரர்களைப்
பேட்டி எடுப்பார்கள்.
அதனால் அவர்களுக்கு
எந்தப் பலனும் கிடையாது.
எலிக்கறி தின்பதனை அரசியலாக்கலாம்.
வருத்தப்படுவது எலியும் விவசாயியும் தான்.
விவசாயிக்கு பயிர் போயிற்று.
எலிக்கு உயிர் போயிற்று.
இவர்களுக்கு என்ன போயிற்று?
இதில் ரியல் எஸ்டேட்டுக்காரர்கள் வேறு
நிலங்களைப் பட்டாபோட்டு விற்கிறார்கள்.
ஒருநாள்
விவசாய வர்க்கமே
காணாமல் போகப் போகிறது.
அதற்குப் பிறகாவது
விவசாயம் வேண்டுமா வேண்டாமா
என்று பட்டிமன்றம் வைத்து
முடிவு காண்பார்களாக.
——-அரங்க குமார்
சென்னை – 600 049.
சட்டம் [புதுக் கவிதை]
சட்டம் ஒரு விலங்கு.
அது பணக்காரர்களிடம்
வாலைக் குழைக்கும்.
ஏழைகளின் மீது விழுந்து பிடுங்கும்.
நீதி தேவதை ஒரு காந்தாரி.
குற்றவாளிகளுக்காக
கண்களைக் கட்டிக் கொண்டவள்.
குற்றவாளிகளை வளர்த்து
தருமத்தைக் காட்டுக்கனுப்புகிறாள்.
அரசியல் சகுனிகள் அவள் சகோதரர்கள்.
அவர்களின் பகடைகள் உருளும்பொழுது
அவர்கள் விரும்பும் தீர்ப்பை வழங்குகிறாள்.
காந்தாரி ஒரு கற்புக்கரசி.
கணவனுக்காக கண்களைக் கட்டிக் கொண்டவள்.
அவள் கண்கள் திறந்திருந்தால்
துரியோதனன் திருந்தி இருப்பான்.
சுயநலக்காரர்கள்
நீதி தேவதையின் கண்களைக் கட்டிவிட்டு
தேசத்தைத் துகிலுரிகிறார்கள்.
இன்று கண்களைக் கட்டிகொண்டிருக்கும்
நீதி தேவதை கற்புக்கரசியா?
விலை போகாதவளா?
நீதி சபையில்
உட்கார்ந்திருக்கும் அனைவரும் உத்தமர்களா?
நல்லவர்கள் என்று நாடு சொல்லும்
வீட்டுமர்களாலும்
விதுரர்களாலும்
துரோணர்களாலும்
என்ன செய்ய முடிந்தது?
குற்றவாளிகளுக்கு வக்கீல்கள்
கடவுளர்களாகத் தெரிகிறார்கள்.
இத்தேசத்தின் புகழ்பெற்ற வக்கீல்கள்
பெரும்பாலோர்
ஊழல்வாதிகளுக்காகத்தானே
வாதிடுகிறார்கள்.
சட்டத்தின் சந்துபொந்துகளை
தெரிந்து வைத்திருக்கிற
அவர்களுடைய மேதைமை
ஊழல் பெருச்சாளிகளுக்குத்தானே
உதவுகிறது.
தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடியும் வெல்லும்;
பாரதியின் வரிகள் பாடாய்ப்படுவதுதான் மிச்சம்.
சிறைக்குச் செல்லும் அரசியல் குற்றவாளிகள்
அனைவரும் இதைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
நீதி தேவதை தன்
கண்களால் பார்க்க முடியாது என்பதால்
அவள் சாலையைக் கடக்க
யாரேனும் கைப்பிடித்து அழைத்துச் செல்ல நேரிடுகிறது.
சில நல்லவர்கள் உதவுவதால்
இப்படிச் சில நன்மைகளும் நடக்கின்றன.
நீதி தேவதை
தன் செவிகளை மட்டுமே நம்பிஇருக்கிறாள்.
அதனால் ஒலிப்பது
உண்மையின் குரலா
போலியின் குரலா என்பது
அவளுக்குத் தெரியாமல் போகிறது.
அவள் கையில் தராசைக் கொடுத்துவிடுவதால்
அவளுக்கு வியாபார நோக்கம்
வந்து விடுகிறது.
அவள்
கண்களைக் கட்டாதீர்கள்!
அவள் கைகளில்
தராசைக் கொடுத்து விட்டு
கால்கடுக்க நிற்க வைக்காதீர்கள்.
அவள் சிம்மாசனத்தின் மீது
கம்பீரமாக வீற்றிருக்க வேண்டும்.
அவள் கண்கள் நீதி சபையை
நன்றாகக் கவனிக்கட்டும்.
அவள் இட்டபணியை
செவ்வனே செய்யும் பணியாட்களை
நியமியுங்கள்.
அவளைக் காக்க வலிமையான படை வேண்டும்.
அவளுக்கு சுதந்திரமான
ஒற்றர் படை வேண்டும்.
அந்தப் படைகள்
அரசாங்கத்தின் படைகளன்று.
அவளுக்கென்று சொந்தமான படை.
அவளுக்கு விஞ்ஞானத்தின்
அத்துணை வசதிகளும் வேண்டும்.
அவள் அரண்மனையில்
வைக்கப்படும் எந்த ஆவணங்களும்
களவு போகக் கூடாது.
அவள் வேலையாட்கள்
தாங்கள் அப்பழுக்கற்றவர்களா
என்பது சோதித்தறியப் படவேண்டும்.
அவளுக்குத் தெரியாமல்
ஓர் அணுவும் அசையக் கூடாது.
அவளுடைய ஆணைக்கு
ஆண்டவனே அஞ்ச வேண்டும்.
—-அரங்க குமார்
சென்னை – 600 049.
அப்பா ஒரு மரபுக் கவிதை [ புதுக்கவிதை]
அப்பா!
பிள்ளைகள்
சிறுவயதாய் இருக்கும்பொழுது
அவர்களுக்குக் கதாநாயகனாய்த் தோன்றி
வளர்ந்தபிறகு
வில்லனாய்த் தெரிபவர்.
வெம்மையைக் கொடுக்கும் கதிரவன்.
கதிரவன் இல்லையென்றால்
ஜனனம் எது?
வீட்டுக்குள்ளே இருக்கும் காவல் அதிகாரி.
பிள்ளைகள்
கூட்ட நெரிசலில்
மாட்டிக் கொள்ளாமல்
தோளில் சுமந்து கொள்ளும்
சுமை தாங்கி!
ரோஜா முள்!
முள் என்று மலரைக் குத்தியது?
தான் கடந்து வந்த பாதை
கரடு முரடானது என்பதால்
வேறு நல்ல பாதையை
அமைத்துக் கொடுக்க முயலும்
ஏழைப் பங்காளன்.
நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து
நம்மைவிட அதிகமாக யோசிக்கும்
அனுபவஸ்தன்.
பிள்ளைகள் சரியில்லையென்றால்
இவன் எப்படி எதிர்காலத்தில்
பிழைக்கப் போகிறான் என்று
அம்மாவுடன் கலந்தாலோசிக்கும் மந்திரி.
படியளக்கும் பரமன்.
பிள்ளையின் வாழ்க்கைச் சாலையின்
ஆரம்ப கட்டத்தில்
நில்! கவனி! செல்!
என்று வழிகாட்டும் போக்குவரத்து விளக்கு!
பிள்ளைகளுக்குச் சிரமம் தராமல்
சுமந்து செல்லும் மின்னேணி!
மாற்ற முடியாத பந்தம்.
மாறாத சொந்தம்!
நீ இப்படி இருக்க வேண்டும்!
நீ இப்படி வாழவேண்டும் என்று
இலக்கணம் சொல்வதால்
எல்லா அப்பாக்களும்
மரபுக் கவிதைகளே!
—– அரங்க. குமார். சென்னை- 600049.
அது! [புதுக்கவிதை]
அது அவனுக்குக் கிடைக்கவில்லை!
அவன் அதைத் துரத்துகிறான்!
அது ஓடுகிறது!
அவனுக்குப் பழிப்புக் காட்டி ஓடுகிறது!
அவன் கால்கள் வலிக்கின்றன!
அவன் என்ன செய்தால்
அது அவன் பக்கத்தில் வரும்?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு
வழியைச் சொல்கிறார்கள்!
அவனும் என்னென்னவோ செய்து பார்க்கிறான்!
அது அவன் பக்கத்தில் வரமாட்டேன் என்கிறது!
நான் நல்லவன்!
என்னிடம் வா என்கிறான்!
அது வரமாட்டேன் என்கிறது!
நான் பாவம் இல்லையா?
மிகவும் களைத்துப்போய்விட்டேன்!
வாம்மா என்கிறான்?
காரிலிருந்து ஒருவன் இறங்கி வருகிறான்!
அவன் பக்கத்தில் நின்றுகொண்டு சிரிக்கிறது!
அம்மா! அவன் மிகவும் பொல்லாதவன் அம்மா!
அவன் கொலைகள் புரிந்தவன்!
பலரை மோசம் செய்தவன்!
இரக்கம் இல்லாதவன்!
கொள்ளைக்காரன்!
நாட்டையே காட்டிக் கொடுப்பவன்!
அவன் வேண்டாம்!
என்னிடம் வா!
ம்ஹும்! வரமாட்டேன் என்றது!
நான் என்ன செய்தால் வருவாய் என்று கேட்டான்?
இவன் எனக்காக எதுவும் செய்வான்?
நீ எதுவும் செய்யமாட்டாய்!
எதற்கெடுத்தாலும்
நியாயம் தர்மம் பேசுபவனிடம்
நான் எப்படி வாழ முடியும்?
அவன் உன்னைத் தூக்கி வீசுகிறானே!
உண்மை தான்!
நீ எப்பொழுதாவது தான்
என்னை நினைக்கிறாய்!
இவன் கனவிலும் நனவிலும்
என்னையே நினைக்கிறான்!
இவன் எனக்காக உயிரையும் கொடுப்பான்?
எனக்காக உயிரையும் எடுப்பான்?
எப்பொழுதும் என்னை காதலிப்பவனிடம்தான்
நானிருப்பேன்!
நீ நல்ல பெயர் எடுக்கப் பார்ப்பவன்?
இவன் எனக்காக எந்தப் பழியையும் ஏற்பான்!
என்று சொல்லிவிட்டு
காரில் இருந்து இறங்கிவன்
சட்டைப் பையில் ஒளிந்துகொண்டு
மெல்ல எட்டிப் பார்த்து சிரித்தது!
அது பேயல்ல! பணம்!
-அரங்க. குமார்
சென்னை - 600 049.
வலி துன்பத்துக்குப் பின்னால் இன்பம் வரும்! உடைபடாத கல் சாமியாவதில்லை! உருக்கப்படாத எஃகு எந்திரங்களாவதில்லை! கோர்க்கப்படாத பூக்கள் மாலையாவதில்லை! துவைக்கப்படாத துணி தூய்மையாவதில்லை! வருத்தப்படாத மனம் மனிதனாவதில்லை! வலிக்காத பிரசவம் நடந்ததில்லை! வலியில்லாத மனிதனில்லை! வலியில்லாத வாழ்க்கையில்லை!
-------- அரங்க. குமார் சென்னை - 600 049.
கண்ணதாசன் [ புதுக் கவிதை]
நீ கவிதை மழை
பொழிந்து கொண்டிருந்தாய்!
நான் காகிதக் கப்பல் செய்து
தண்ணீரில் விட்டுக்கொண்டிருந்தேன்.
நான் கவிதைகளைப்
படிக்க ஆரம்பித்தபோது
நீ வானுலகம் போய்விட்டதாய்ச் சொன்னார்கள்!
நீ வாழ்ந்த காலத்தில் நானிருந்தேன்!
எனக்கு உன்னைத் தெரியாது!
எனக்கு உன்னைத் தெரிந்தபோது
நீ துருவ நட்சத்திரமாகிவிட்டாய்!
நான் உன் கவிதைகளில் கரைந்தேன்!
கற்பனை சுகமானது என்பார்கள்.
உன் கற்பனைகளில் நிஜமிருந்தது.
நீ உறவுகளுக்கு அன்பைச்சொன்னாய்!
காதலிக்கக் கற்றுத் தந்தாய்!
குழந்தைகளைத் தாலாட்டினாய்!
குமரர்களுக்குத் தமிழை மீட்டினாய்!
உறவைச் சொன்னாய்!
பிரிவைச் சொன்னாய்!
வெற்றியைச் சொன்னாய்!
தோல்வியைச் சொன்னாய்!
புரியாத கடவுள் தத்துவம் புரிந்தது!
எழுதத் தெரியாதவனுக்கும்
எழுதத் தோன்றியது!
பாடத் தெரியாதவன் பாடினான்!
பேசத் தெரியாதவனும் பேசினான்!
கண்ணதாசன் சென்றவழியில்
செல்லவேண்டும் என்று கிளம்பிய
இளங்கவிஞர்கள் எத்தனையோ பேர்!
நீ அன்னையிடம் வரம் வாங்கியவன்!
வார்த்தைகளுக்குத் தவம் கிடக்காதவன்
உன் நாவிலிருந்து
தேனருவி புறப்பட்டு
திரை கடலில் ஆர்ப்பரித்தது!
நீ பட்டதையும் கெட்டதையும்
பாடியதால் பட்டினத்தான்!
சந்தத்தில் அருணகிரி!
சொல்வண்ணத்தில் ஒண்கம்பன்!
உன்னோடு பேச ஆசை!
அது இயலாது என்பதனால்
தமிழோடு பேசுகிறேன்!
தமிழோடு பேசினால்
உன்னோடு பேசியது போலத்தானே!
-------- அரங்க. குமார்
சென்னை - 600 049.
கடற்கரை [ கவிதை ]
நீலத் திரைகடலோரம் - நின்று
நெஞ்சம் மகிழ்ந்திடு நேரம்;
காலைத் தழுவியே ஓடும் - அந்த
காதல் அலைகளைப் பாரும்;
காலம்பல கடந்தாலும் - நல்ல
மாற்றம்பல நிகழ்ந்தாலும்
நீலக்கடற்கரை யோரம் - வந்து
நித்தம் அழகினைக் காண்பார்;
காதற்கனிரசம் பொங்க - பல
காதல் மொழிகளைப் பேச
ஆழிக்கரையினை நாடும் - இன்பக்
காதற் கிளிபல நூறு!
காமக்களிகளைச் செய்ய - சிலர்
வேடந் தரிப்பது உண்டு;
ஈனப்பிறவிகளாய் வந்து - இங்கு
ஈனச்செயல் புரிவார்;
வெட்கந்துறப்பது இங்கு - தெரு
விலங்குகளுக்குச் சரியே!
வெட்கம் இழப்பதிங்கு - நல்ல
மனிதப்பிறவி யாமோ?
பிள்ளைகள் ஒன்றையொன்று - துரத்திப்
பிடித்திடச் செல்வதைப்போல்
துள்ளியே அலைகள் வந்து - கரையைத்
தொட்டுவிட்டோடிச் செல்லும்;
ஏற்றினைத் தழுவச் செல்லும் - வீர
இளைஞர்கள் கூட்டம் போல
காற்றினால் உந்தப்பட்டு - கடல்
அலைகளும் கரையில் மோதும்.
துன்பங்கள் மாறிமாறி - நம்
உள்ளத்தைத் தாக்கும்போது
நெஞ்சத்தில் அலைகள்மோதும் - நம்மை
நிமிடத்தில் புரட்டிப்போடும்.
பிள்ளைகள் போல அலைகள் - தொட்டு
விட்டோடும்போது உள்ளந் துள்ளும்;
அள்ளியே அணைக்கத் தோன்றும் - நம்
ஆசையும் அதிகமாகும்.
பிள்ளைகள் உருவம் நீங்கி - பெரும்
பேயென மாறினாற்போல்
வல்லிய வேகங்கொண்டு - அலைகள்
வான்தொட வளரக்கூடும்.
சாதிமத பேதமின்றி - வேத
சாத்திர நெறிகளின்றி
ஆதியோடந்த மாக - நின்ற
அனைவரையும் கொண்டுபோகும்.
ஆழிசூழ் இயற்கையெல்லாம்
ஈசனே என்பதறிக!
அன்பினில் தாயுமாகும்- சினம்
வந்திடின் தந்தையாகும்.
----- அரங்க. குமார்
சென்னை- 600049.