சோறு போடுமோ உங்கள் தமிழென்று
கேட்கின்றார்;
சோறு போடு என்று கேட்பதே தமிழில் தானே;
உங்கள் அன்னையரிடம் இந்தியில் கேளுங்களேன்.
இந்தியும் கற்றிருக்கும் தாயாக இருந்தால்
அச்சா அச்சா என்று தும்முவாள்;
மன்னிக்கவும். மெச்சிக் கொள்வாள்;
தமிழச்சி தாயாக இருந்தால்
என்னடா உளறுகிறாய்? கொழுப்பா என்று கேட்பாள்?
சோறு போடுவது தமிழின் வேலையன்று;
இந்தி படித்தவனுக்குத் தான் வேலை கிடைக்கும்;
ஆங்கிலம் படித்தவனுக்குத்தான் வேலை கிடைக்கும்
என்று எவனடா சொன்னான்;
தமிழ் நாட்டில் தமிழ் தெரிந்தவன் தானடா
வேலை செய்ய முடியும்;
தமிழ் அங்காடியில் இந்தியில்
வெங்காயம் விற்றுப் பாரேன்;
நீ பிறக்கும் போதே துபாயில் வேலைசெய்யப் பிறந்தவன்;
மும்பையில் வேலை செய்யப் பிறந்தவன்
என்று வரம் வாங்கிக் கொண்டா பிறந்தாய்;
அரை குறையாகப் படித்துவிட்டு
இங்கு மூட்டை தூக்க அவமானம்?
நண்பர்கள் மத்தியில்
இவையெல்லாம் இழிதொழில்கள் என்று
ஒதுக்கிவிட்டாய்;
கடல் கடந்த தேசத்தில்
கழிவறை கழுவவும் உன் மனம் துணிகிறது;
படிப்பு வராதது குற்றமன்று;
எதைச் செய்வது என்று உன் மனம் குழம்புகிறது;
புத்திமதி என்ற பெயரில்
பெரியவர்கள் சொல்வது உன்னைக் குழப்புகிறது;
நண்பர்கள் என்ற பெயரில்
நீயாடா இப்படி? என்ற கேள்வி
உன்னை அவமானப்பட வைக்கிறது;
உனக்கு எது பிடிக்கும் என்று யோசிக்க மறந்துவிட்டாய்;
மும்பையில் சென்று வேலை செய்வது என்று
முடிவு செய்து விட்டால்,
மும்பை மக்கள்
மூன்றே மாதத்தில்
உனக்கு கேள்விகள் கேட்டே
இந்தி கற்றுத் தந்து விடுவார்கள்;
இங்கு வந்து பணக்காரர்களாக மாறிப்போன
மார்வாரிகளும்(மார்வாடிகளும்)
பஞ்சாபிகளும் பீகாரிகளும்
பள்ளியில் தமிழ் படித்து விட்டா
இங்கு வந்து தொழில் செய்கிறார்கள்;
அவர்கள் தமிழைக் கொல்வதை நாம் ரசிக்கவில்லையா?
நீ அங்கு சென்று முதலில் இந்தியைக் கொன்று பின்னர்
இந்தியைக் கற்றுக் கொள்ளப்போகிறாய்;
அமெரிக்காவில்தான்
திறமைக்குத் வேலை கிட்டும் என்பார்கள்;
விக்ரம் சாராபாயும்
அப்துல் கலாமும்
திறமைக்கு வேலையில்லாமலா
போய்விட்டார்கள்;
இலட்சக்கணக்கான மக்கள்
அப்துல்கலாமை
அழுது கொண்டே வழியனுப்பி
வைக்கவில்லையா?
அவர் பணத்தைத் தேடித் போகவில்லை;
புகழைத் தேடித் போகவில்லை;
இரண்டும் அவரைத் தேடி வந்தன;
அவரை மற்ற மாநிலமக்கள்
வெறுத்துவிட்டார்களா என்ன?
காந்தியைத் தான்
குஜராத்தியர் என்று தமிழ் மக்கள்
வெறுத்து விட்டார்களா?
காந்தி விருப்பப்பட்டுத்தானே
தமிழில் சிலவார்த்தைகளைக் கற்றுக் கொண்டு
தமிழில் பேசினார்;
நீங்கள் தமிழில் தான் பேசவேண்டுமென்று
அவரை யார் வற்புறுத்தினார்கள்?
அவர் வேடதாரியா நாடகம் போடுவதற்கு?
அந்த கள்ளமற்ற மனிதர் தமிழில் சில வார்த்தைகளைப்
பேசிவிட்டு சிரிக்கும்போது
அங்கு தமிழன்னையும் சிரித்தாள்;
நீ ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்;
ஆனால் தமிழ் சோறு போடாது என்று சொல்லாதே;
ஐக்கிய நாடுகளின் சபையிலே
அப்துல்கலாம் தமிழில் பேசினார்;
தமிழ்க் கவிதை சொன்னார்;
விஞ்ஞானி தமிழை
அவமானமாகவா நினைத்தார்;
பெருமிதமாகத்தான் நினைத்தார்;
விஞ்ஞானமும் தேவை தான்;
தமிழும் தேவை தான்;
தமிழை ஒழுங்காகக் கற்றவன் தோற்கமாட்டான்;
விஞ்ஞானத்தை ஒழுங்காகக் கற்றவனும்
தோற்கமாட்டான்;
தமிழன்னை என்னைப் பாராட்டு!
சீராட்டு! என்று பிச்சை கேட்க மாட்டாள்;
அவளே அரசி! பேரரசி!
மொழிகளுக்கெல்லாம் பேரரசி;
அவள் பாதங்களைத்தான்
புலவர்களும் பேரரசர்களும்
பாடிப் பரவினார்கள்;
மன்னர்கள் தாம் தமிழை வேண்டினார்கள்;
தமிழன்னை மன்னர்களை வேண்டவில்லை;
என்னைப் பாடு என்று தமிழன்னை வேண்டமாட்டாள்;
உனக்குக் கொடுப்பினை இருந்தால்
அவளைப் பாடிப் பரவு;
தமிழன்னை சோறு போடமாட்டாள்;
உனக்கு நீதான் சோறு போட்டுக் கொள்ளவேண்டும்.
—- அரங்க குமார்.
சென்னை – 600 049