காதல் வளர்கிறது!

காதல் வளர்கிறது!

சின்னஞ் சிறு சிரிப்பிற்கே

சிங்காரச் சென்னையை அவளுக்கு

எழுதி வைக்கத் தோன்றுகிறதா உனக்கு?

உன் மனதில் காதல் விதை விழுந்து விட்டது!

யார் வீட்டுச் சென்னையை

யாருக்கு எழுதி வைப்பது?

இருந்தாலும் அது காதல் தான்!

 

பெண்ணைப் பிடித்துவிட்டால்

பேயாக அலைகின்றாய்.

நாயாக அவள் வீட்டு வாசலில்

தவம் கிடக்கின்றாய்.

எப்பொழுதும் அவளின்

ஒரு பார்வைக்காக ஏங்கிக் கிடக்கின்றாய்.

 

உன் வேலைகளை கடமைக்குச் செய்து விட்டு

கற்பனையில் அவளோடு திரிகின்றாய்.

உன்னுடைய உறவுகளை

மறந்து போகின்றாய்.

அம்மா கூப்பிட்டால்

எரிந்து விழுகின்றாய்;

தங்கை பேசவந்தாள்

காதுகளில் விழுவதில்லை;

தந்தை பேசுவது உன் காதுகளுக்கு எட்டுவதே இல்லை;

 

உன் காதலிக்கு

பிரம்ம வித்தை தெரிந்திருந்தால்

இந்த ஈறைப் பேனாக்குவாள்;

பேனைப் பெருமாளாக்குவாள்;

பெருமாளை தன் நெஞ்சத்தில் இருத்திவைப்பாள்;

 

அவளின் அங்கீகாரம் கிடைக்கும்வரை

நீ போடும் கூத்திருக்கிறதே!

கூத்தரசன் கூத்தை விட மிஞ்சிவிடும் போ!

அந்த இடத்தைப் பிடிப்பதற்கு

காலைப் பிடிக்கின்றாய்.

கைகளைப் பிடிக்கின்றாய்.

காலம் முழுவதும் தவம் செய்வேன் என்கின்றாய்.

கண்ணீர் விடுகின்றாய்;

கவிதைகளைப் பொழிகின்றாய்;

காதலை மெய்யாக்க

பொய்களை விதைக்கின்றாய்;

நீ சொல்வது மெய்யா பொய்யா என்று

உனக்கே தெரியாது.

உன்மனம் அப்படி சொல்லச் சொல்லுகிறது;

 

நீ மாறிவிட்டால் அது பொய்யாகப் போய்விடுகிறது.

மாறாவிட்டால் மெய்யாகவே இருக்கிறது;

அவள் சம்மதம் சொல்லுவதற்குள்

அவள் சாமி  நீ பக்தன்;

அவள் கண்ணசைவை

அவ்வளவு சுலபமாகக் காட்டிவிடமாட்டாள்;

பிரம்ம ரிஷி பட்டம் பெற

நீ விசுவாமித்திர தவம் செய்ய வேண்டும்;

சம்மதம் தந்து விட்டால்

நீ சாமி! அவள் பக்தை!

 

அவள் அந்த வரத்தை

தவறான சமயத்தில் தந்து விட்டால்

அவளுக்குப் பிரச்சனை!

வரம் தந்தவன்

தலையில் கை வைக்க வருவதுபோல

அவள் ஓட நீ துரத்துவாய்;

 

அவள் வரத்தை காலமறிந்து தரவேண்டும்;

யாருக்குத் தரவேண்டும் என்பதை தெளிந்து

தரவேண்டும்;

அந்த ஞானம் அவளுக்கு வேண்டும்;

ஞானமுள்ளவள் உன்னை ஞானியாக மாற்றுவாள்;

போகமுள்ளவள்

உன்னைப் புழுவாக மாற்றுவாள்;

 

அவள் காதலுக்கு சக்தியுண்டு;

அது உன்னை யோசிக்கச் செய்கிறது;

அவள் ஆக்க சக்தி என்றால்

உன்னை ஆக்குவாள்;

அவள் காதல் உன்னைக் கட்டிப்போடவில்லையென்றால்

அது காதலல்ல;

நீயும் பொய்;

அவளும் பொய்;

நீ காதலால் இணையவில்லை;

கட்டாயத்தால் இணைகிறீர்கள்;

அல்லது காமத்தால் இணைகிறீர்கள்;

கடமைக்கு இணைகிறீர்கள்;

பணத்துக்காக இணைகிறீர்கள்;

 

காதலுக்கு

ஒட்டுவேலை தேவை இல்லை;

பிரிந்து போகும் உங்களை

ஒட்டிவிட நாலு பேர் தேவை இல்லை;

பிரியவே மாட்டீர்கள்;

 

காதல் வேறு; குடும்பம் வேறு;

உண்மையான காதலர்களின்

குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கலாம்;

காதல் இரண்டு பேர் சம்பந்தப்பட்டது;

குடும்பம் என்பது பலபேர்கள் சம்பந்தப்பட்டது;

ஒரு காதல் வளர்கிறது! தேய்வதில்லை!

                                   ———-  அரங்க குமார் .

                                                        சென்னை – 600 049.

 

குற்றம்

குற்றம்

கோடிகோடியாய்    சம்பாதித்து

பட்டுமஞ்சத்தில் படுத்துத் தூங்கினாலும்

அவ்வப்போது தரையில் அமர்ந்து பழகவேண்டும்.

அப்பொழுது தான் தாயின் மடியில் படுத்து உறங்கிய

நினைவு வரும்.

 

பழையதை  மறப்பவனும் 

பெற்ற தாய் தந்தையை மறப்பவனும்  ஒன்றே;

இன்று  நீ சக்கரவர்த்தியாகவே இருந்தாலும்

வருங்காலம்

உன்னை பரண் மீது மூட்டை கட்டிப் போட்டுவிடும்;

 

காந்தி  தேசத்தில்

காந்திக்கே  மதிப்பில்லை;

நீ எந்த மூலை?

 

புதியதை வரவேற்பதற்காக

பழையதை விற்றுவிட 

உறவுகள் என்ன கட்டில் மெத்தை தலையணைகளா?

 

உன்னை குப்பைத்தொட்டியில் போட்ட

அம்மாவை நீ வெறுக்கலாம்.

உன் தாயுடன் படுத்துவிட்டு ஒடிப்போன

அப்பாவை வெறுக்கலாம்;

 

ஆனால்

உன்னை ஒழுங்காகப் படிக்கவைத்து ஆளாக்கிய

பெற்றோர்களை முகவரி இல்லாமல் செய்வது

என்ன தர்மம்? 

 

தாய் தந்தையின்றி

காப்பகங்களில் பிள்ளைகள் வளர்வது

பிள்ளைகள் குற்றமன்று;

 

உன்னை அனாதை ஆக்காத

பெற்றோர்களை

காப்பகங்களுக்கு அனுப்புவது

குற்றம்.

மன்னிக்கமுடியாத குற்றம்.

                                                                       —- அரங்க குமார்.

                                                                               சென்னை –  600 049.

சூதாட்டம்

அடுத்த வினாடி என்ன நடக்கப் போகிறது

என்று அறியாமல் வாழும் மானுட வாழ்க்கையே

ஒரு ஆட்டம் தான்.

இதில் சூது கிடையாது.

இதை இயற்கை என்றும் கூறலாம்.

இறைவனுடைய திருவிளையாடல் என்றும் கூறலாம்.

இன்று  மனிதன் கண்டு பிடித்த ஆட்டங்கள் பலவாயிரம்.

ஒரு சகுனியின் சூதாட்டம்

மகாபாரதத்தில் போரைத் தருவித்தது.

பலகோடி உயிர்களைப் பலிகொண்டது.

இன்று பலவாயிரம் சகுனிகள் சூதாடுகிறார்கள்.

அரசியல் சூதாட்டம்

மக்களைப் பலி வாங்குகிறது.

விளையாட்டில் சூதாட்டம்

மக்களை மடையர்கள் ஆக்குகிறது.

நேருக்கு நேராக ஆடும் சூதாட்டம்

பல குடும்பங்களை நடுத் தெருவிற்கு கொண்டுவந்தன.

இன்று மாயச் சகுனிகள் எங்கோ இருக்கிறார்கள்.

சூதாட்டம் தொலை பேசியில் வலைத்தளங்களில்

நடைபெறுகிறது.

அன்று சூதாட்டத்தின் முடிவை மாற்றி அமைக்க

கண்ணன் வந்தான்.

இன்று எந்த கண்ணன் வரப் போகிறான்.?

                                                          —– அரங்க குமார்.

                                                                   சென்னை- 600 049.      

 

தமிழ் சோறு போடுமா?

சோறு போடுமோ உங்கள் தமிழென்று

கேட்கின்றார்;

சோறு போடு என்று கேட்பதே தமிழில்  தானே;

 உங்கள் அன்னையரிடம் இந்தியில் கேளுங்களேன்.

இந்தியும் கற்றிருக்கும் தாயாக இருந்தால்

அச்சா அச்சா என்று தும்முவாள்;

மன்னிக்கவும். மெச்சிக் கொள்வாள்;

தமிழச்சி தாயாக இருந்தால்

என்னடா உளறுகிறாய்? கொழுப்பா என்று கேட்பாள்?

 

 

சோறு போடுவது தமிழின் வேலையன்று;

இந்தி படித்தவனுக்குத் தான் வேலை கிடைக்கும்;

ஆங்கிலம் படித்தவனுக்குத்தான் வேலை கிடைக்கும்

என்று எவனடா சொன்னான்;

தமிழ் நாட்டில் தமிழ் தெரிந்தவன் தானடா

வேலை செய்ய முடியும்;

தமிழ் அங்காடியில் இந்தியில்

வெங்காயம் விற்றுப் பாரேன்;

 

நீ பிறக்கும் போதே துபாயில் வேலைசெய்யப் பிறந்தவன்;

மும்பையில் வேலை செய்யப் பிறந்தவன்

என்று வரம் வாங்கிக் கொண்டா பிறந்தாய்;

அரை குறையாகப் படித்துவிட்டு

இங்கு மூட்டை தூக்க அவமானம்?

நண்பர்கள் மத்தியில்

இவையெல்லாம் இழிதொழில்கள் என்று

ஒதுக்கிவிட்டாய்;

கடல் கடந்த தேசத்தில்

கழிவறை கழுவவும் உன் மனம் துணிகிறது;

 

படிப்பு வராதது குற்றமன்று;

எதைச் செய்வது என்று உன் மனம் குழம்புகிறது;

புத்திமதி என்ற பெயரில்

பெரியவர்கள் சொல்வது உன்னைக் குழப்புகிறது;

நண்பர்கள் என்ற பெயரில்

நீயாடா இப்படி? என்ற கேள்வி

உன்னை அவமானப்பட வைக்கிறது;

உனக்கு எது பிடிக்கும் என்று யோசிக்க மறந்துவிட்டாய்;

 

 

மும்பையில் சென்று வேலை செய்வது என்று

முடிவு செய்து விட்டால்,

மும்பை மக்கள்

மூன்றே மாதத்தில்

உனக்கு கேள்விகள் கேட்டே

இந்தி கற்றுத் தந்து விடுவார்கள்;

 

 

இங்கு வந்து பணக்காரர்களாக மாறிப்போன

மார்வாரிகளும்(மார்வாடிகளும்)

பஞ்சாபிகளும் பீகாரிகளும்

பள்ளியில் தமிழ் படித்து விட்டா

இங்கு வந்து தொழில் செய்கிறார்கள்;

அவர்கள் தமிழைக்  கொல்வதை நாம் ரசிக்கவில்லையா?

நீ அங்கு சென்று முதலில் இந்தியைக் கொன்று பின்னர்

இந்தியைக் கற்றுக் கொள்ளப்போகிறாய்;

 

 

அமெரிக்காவில்தான்

திறமைக்குத் வேலை கிட்டும் என்பார்கள்;

விக்ரம் சாராபாயும்

அப்துல் கலாமும்

திறமைக்கு வேலையில்லாமலா

போய்விட்டார்கள்;

இலட்சக்கணக்கான மக்கள்

அப்துல்கலாமை

அழுது கொண்டே வழியனுப்பி

வைக்கவில்லையா?

அவர் பணத்தைத் தேடித் போகவில்லை;

புகழைத் தேடித் போகவில்லை;

இரண்டும் அவரைத் தேடி வந்தன;

அவரை மற்ற மாநிலமக்கள்

வெறுத்துவிட்டார்களா என்ன?

 

காந்தியைத் தான்

குஜராத்தியர்  என்று தமிழ் மக்கள்

வெறுத்து விட்டார்களா?

காந்தி விருப்பப்பட்டுத்தானே

தமிழில் சிலவார்த்தைகளைக் கற்றுக் கொண்டு

தமிழில் பேசினார்;

நீங்கள் தமிழில் தான் பேசவேண்டுமென்று

அவரை யார் வற்புறுத்தினார்கள்?

அவர் வேடதாரியா நாடகம் போடுவதற்கு?

அந்த கள்ளமற்ற மனிதர் தமிழில் சில வார்த்தைகளைப்

பேசிவிட்டு சிரிக்கும்போது

அங்கு தமிழன்னையும் சிரித்தாள்;

 

நீ ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்;

ஆனால் தமிழ் சோறு போடாது என்று சொல்லாதே;

ஐக்கிய நாடுகளின் சபையிலே

அப்துல்கலாம் தமிழில் பேசினார்;

தமிழ்க் கவிதை சொன்னார்;

விஞ்ஞானி தமிழை

அவமானமாகவா நினைத்தார்;

பெருமிதமாகத்தான் நினைத்தார்;

விஞ்ஞானமும் தேவை தான்;

தமிழும் தேவை தான்;

தமிழை ஒழுங்காகக் கற்றவன் தோற்கமாட்டான்;

விஞ்ஞானத்தை ஒழுங்காகக் கற்றவனும்

தோற்கமாட்டான்;

 

தமிழன்னை என்னைப் பாராட்டு!

சீராட்டு! என்று பிச்சை கேட்க மாட்டாள்;

அவளே அரசி! பேரரசி!

மொழிகளுக்கெல்லாம் பேரரசி;

அவள் பாதங்களைத்தான்

புலவர்களும் பேரரசர்களும்

பாடிப் பரவினார்கள்;

மன்னர்கள் தாம் தமிழை வேண்டினார்கள்;

தமிழன்னை மன்னர்களை வேண்டவில்லை;

என்னைப் பாடு என்று தமிழன்னை வேண்டமாட்டாள்;

உனக்குக் கொடுப்பினை இருந்தால்

அவளைப் பாடிப் பரவு;

தமிழன்னை சோறு போடமாட்டாள்;

உனக்கு நீதான் சோறு போட்டுக் கொள்ளவேண்டும்.

 

                                   —- அரங்க குமார்.

                                            சென்னை – 600 049

 

வண்ணத்துப் பூச்சி (புதுக்கவிதை)

வண்ணத்துப் பூச்சி 

 

கூட்டுப் புழுவொன்று

வயசுக்கு வந்ததில்

தாவணி போட்டுக்கொண்டது.

வண்ணத்துப் பூச்சி ஆனது.

வண்ணத்துபூச்சியை யாரும்

கட்டுப்படுத்தவில்லை.

கட்டுப்படவுமில்லை.

கூட்டை விட்டு வெளியில்வந்த

வண்ணத்துப் பூச்சி உலகைப் பார்த்து வியந்தது.

அதற்கு மலரும் மணமும்  பிடித்துப் போனது.

அதோ அந்த சிவப்பு மலர்!

இதோ இந்த நீல மலர்!

அதோ அங்கே வெள்ளை மலர் என்று

மலருக்கு மலர் தாவியது.

அது மிகவும் இலேசாக இருந்ததால்

எந்த மலருக்கும் துன்பம் விளையவில்லை.

அதற்கு யாருக்கும் துன்பம் செய்யத் தெரியவில்லை.

அதற்கு வெட்டி முறிக்கும் வேலைகளில்லை.

அதற்கு எந்த சாதனைகளும்

புரியவேண்டிய அவசியமில்லை.

அதன் தேவை மிகவும் சிறியது.

வண்ணத்துப்பூச்சி மகிழ்ச்சியின் சின்னமாயிருக்கும்

அதன் இறக்கைகளை யாரும் பிய்த்துப் போடாத

வரையில்.

 

                                              ————- அரங்க குமார்.

                                                             சென்னை – 600 049.

 

படையல் (புதுக்கவிதை)

படையல்

உங்கள் வீட்டில்

சாமி கும்பிடும்போது

படையலில் காரசேவு வைக்கிறாயே

ஏன் என்றுகேட்டாள் பக்கத்துவீட்டுக்காரி.

என் வீட்டுக்காரரின் பாட்டி சாகும்போது

காரசேவு சாப்பிடணும்போல் இருக்கிறது

என்றாராம்.

வாங்கி வருகிறேன் என்று சொன்னவர்

மறந்துவிட்டாராம்.

அதற்குள் பாட்டியும் மறைந்து விட்டார்களாம்.

அதற்குத்தான் என் மாமனார்

படையலில் காராசேவு வைக்கச்சொன்னார்.

என் வீட்டுக்காரரும் அதையே செய்து வருகிறார்.

அன்னதானம் செய்கிறீர்களே எதற்கு?

என்று  கேட்டாள்.

என் மாமனார் போனபிறகு

என் மாமியாருக்கு நான் சோறு போடமாட்டேன்.

அந்தக் கிழவி

அய்யோ! பசிக்குதே! என்று

வயிற்றில் அடித்துக்கொண்டு அழும்.

காலையில் தான் இரண்டு இட்டலிகள் கொடுத்தேன்.

மத்தியானம் இரண்டு மணிக்கெல்லாம்

சோறு சோறு என்று கேட்டால்

எங்கு போவது என்பேன்.

அந்தக் கிழவி தட்டை எடுத்துக்கொண்டு

அக்கம் பக்கத்து வீடுகளுக்கெல்லாம் செல்லும்.

என்னை குருவியாய்ச் சாபிக்கும்.

என் வீட்டுக்காரர் பயந்த சுபாவம்.

நான் குரல் கொடுத்தால் அடங்கிவிடுவார்.

அந்த கிழவியும் போய் சேர்ந்துவிட்டாள்.

இப்பொழுது எங்கள் பிள்ளைகளுக்கு

அடிக்கடி நோய் வருவது

அந்தக் கிழவியின் சாபம்தான் என்கிறார்கள்.

அதுதான் அன்னதானம் செய்கிறோம் என்றாள்.

வேட்டி தானம் செய்கிறாயே எதற்கு என்று கேட்டாள்?

எங்க அப்பாவுக்கு வெள்ளை வேட்டி என்றால்

மிகவும் இஷ்டம்?

அதனால் தான் செய்கிறேன் என்றாள்.

ஒருவர் போனபிறகு

காலம் கடந்து

அவருக்கு விருது கொடுப்பதிலும்

விருந்து கொடுப்பதிலும்

நாம் இந்நாட்டு மன்னர்கள்.

                                           ———–அரங்க. குமார்

                                                       சென்னை- 600 049.

 

நண்பன் (புதுக்கவிதை)

 நண்பன் 

 

சுடரைத் தூண்டிவிடும் கைகள்;

விளக்கின் உள்ளிருக்கும் எண்ணெய்;

அணைந்து போகாமல்

அணைத்து நிற்கும் கரங்கள்;

சுடரின் உள்ளிருக்கும் இருளை

பெரிதுபடுத்தாத மனம்;

என்னைத் தொட்டபோது சுட்டதுண்டு;

சுட்டபோதும் அணைத்ததில்லை;

அவன் என் நண்பன்.

 

                                  ———— அரங்க. குமார்

                                                 சென்னை – 600 049

மரம் (ஹைக்கூ கவிதை )

மரம் (ஹைக்கூ  கவிதை )

 

ஒன்று நிழலில் வாழ்கிறது என்றால்

ஒன்று வெய்யிலில் காய்கிறது

என்று பொருள்.

 

                             —–அரங்க. குமார்

                                   சென்னை – 600 049

 

பேதங்கள் ( புதுக்கவிதை)

பேதங்கள்  

 

ஆணென்றும் பெண்ணென்றும்

பேதங்கள் செய்வித்த

ஆண்டவனைப் போற்றவேண்டும்.

அதனால்

இல்லாததைக் கண்டு

இல்லாததைத் தேடும்

காதல்நோய்  பிறந்தது.

எனக்கு வந்த நோயை நீ தீர்ப்பாய்.

உனக்கு வந்த நோயை நான் தீர்ப்பேன்

என்ற சமரசம் பிறந்தது.

பேதங்கள் இல்லையென்றால்

சமரசம் எதற்கு.

                            ———-அரங்க. குமார்

                                         சென்னை – 600049

 

காதலின் வடிவங்கள் (புதுக் கவிதை)

காதல் பூவாய் மலரும்.

சத்தம் இருக்காது.

காணும்போதெல்லாம் பூத்து நிற்கும்.

காதல் பூத்ததனை

முகம் காட்டிவிடும்.

காதல் ஒருதலையோ ?

இருதலையோ ?

காதல் காதல் தானே.

தினம் தினம் பார்க்கத் தோன்றும்.

பாராதபோதினிலே ஏக்கந் தோன்றும்.

மனம் வாடிவிடும்.

பித்துப் பிடித்துவிடும்.

காதற்பித்தினிலே

எத்தனையோ வகைகளுண்டு;

போகின்ற வழியினை மறித்து நிற்கும்.

வலியப் பேசும்.

அர்த்தம் இருந்திடலாம்.

இல்லாமலும் போய்விடலாம்.

அடிக்கடி எதிரில் போய்நிற்கத் தோன்றும்.

தன் நல்ல குணத்தைக் காட்டி நிற்கும்.

நன்றி சொல்லும்.

திறமையைக் காட்டமுயலும்.

திறமை இருந்தால்

உயர்ந்து நிற்கும்.

இல்லையென்றால்

அசட்டுச் சிரிப்பை உதிர்க்கும்.

நான் மீண்டும் முயல்வேன் என்று சொல்லும்.

உதவும் குணம் அதிகமாக இருக்கும்.

சிலர் காதல் அறிவினை விரும்பும்.

சிலர் காதல் அறிவீனத்தை விரும்பும்.

சிலர் காதல்

தீயப்பழக்கங்களுக்கும்

நியாயம் கற்பித்துக்கொள்ளும்.

தீயவன்  நல்லவனாய்த்  தோன்றுவான்.

நல்லவன்  தீயவனாய்த் தோன்றுவான்.

சிலர் காதல் பொய்களைத் தொடர்ந்து சொல்லும்.

சிலர் காதல் மழைத் தூறல் போல் வந்து போகும்.

சிலர் காதல் ஒரே இடத்தில் நிலைக்கும்.

சிலர் காதல் போகுமிடமெல்லாம் தொடரும்.

சிலர் காதல் நீறு பூத்த நெருப்பாய் இருக்கும்.

சிலர் காதல் அச்சத்தில் மடிந்து விடும்.

காதல் புனிதமானது என்பார்கள்.

கங்கையைப் போல் பிணங்களும் மிதக்கும்.

சாக்கடை நீர் கலக்கும்.

சிலர் காதல் தோற்றுப்போனதினால்

முடிந்து போகும்.

சிலர் காதல் தியாகமாகும்.

சிலர் காதல் மாளிகையாய்க் கோபுரமாய் விரியும்.

சிலர் காதல் நோட்டுப் புத்தகத்தில்

கவிதைகளாய்ச் சிரிக்கும்.

சிலர் காதல் வாங்கித் தின்பதிலேயே கழியும்.

சிலர் காதல் வாங்கிக் கொடுப்பதிலே கழியும்.

சிலர் காதல் பணம் பார்த்து வரும்.

சிலர் காதல் உத்தியோகம் பார்த்து வரும்.

சிலர் காதல் உடற்சூட்டைத் தணித்துக்கொள்ள வரும்.

பிள்ளைப் பருவத்துக் காதல்

முதிய பருவத்துக் காதல்

என்று காதலின் வடிவங்கள் இன்னும் எத்தனையோ?

விரும்பாத பெண்ணைக் கொல்ல நினைப்பதும்

ஒருவிதக் காதல்தான் என்று

திரைப்படங்களில்

சொல்லாமல் இருந்தால் நல்லது.

 

                                                                      —- அரங்க குமார்

                                                                               சென்னை – 600 049.